கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மக்களால் முற்றுகை!

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.


வரலாற்றில் முதன்முறையாக அதிகளவான கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராம சேவையாளர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த முற்றுகை பொதுமக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் போதையொழிப்பு செயற்றிட்டம் கிராம மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.

பன்சேனை கிராம சேவையாளர் பகுதியில் உள்ள கண்டியன்குளம், அடைச்சகல், நல்லதண்ணி, ஓடைக்குளம் ஆகிய குளக்கரைகளை அண்டிய பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதியிலேயே இந்த கசிப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளதாக பன்சேனை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேறு பிரதேசங்களில் இருந்து வருவோர் இவ்வாறான நடவடிக்கைகளை காட்டுப்பகுதிக்குள் மேற்கொள்வதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மூன்று பகுதிகளிலும் சுமார் 19 கசிப்பு பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பரல்களை மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு கொண்டுவந்த மக்கள், அவற்றினை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரனிடம் ஒப்படைத்தனர்.

ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ திட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட போதையொழிப்பு செயற்றிட்டத்தின் கீழ் பன்சேனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினையடுத்தே இந்த முற்றுகையினை பொதுமக்கள் மேற்கொண்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட கசிப்பு பரல்களை கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உதவி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.