இலங்கை ராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை செய்யும் எம்மவர்களுக்கு சமர்ப்பணம்!

சம்பவம்-1
2002ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி, அக்கரைப்பற்றில் அப்துல் வஜீட் என்ற 24 வயது முஸ்லிம் வாலிபன் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வாலிபன் ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவன் என்பதால், இது புலிகளின் வேலையாகத்தான் இருக்கவேண்டும் என்று கூறிக் கொதித்தெழுந்த அப்பிரதேச முஸ்லிம்கள், ஆர்ப்பாட்டம், கர்த்தால்,  கடையடைப்பு என்று இறங்கியிருந்தனர். முஸ்லிம் இளைஞனைக் கடத்தியது விடுதலைப் புலிகளே|| என்று அமைச்சர் அதாவுல்லா போன்றவர்கள் அடித்துப் பேசினார்கள்.  அப்பிரதேசத்தில் மூன்று தினங்கள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை மிக மோசமாக இருந்தது.
இச்சம்பவம் நடைபெற்று மூன்றாம் நாள் 18ம் திகதி வெள்ளிக் கிழமை அதிகாலை, கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவனின் வீட்டை பொலிஸார் திடீரென்று சுற்றிவளைத்தபோது, குறிப்பிட்ட வாலிபன் தனது வீட்டில் சாவகாசமாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவனைக் கைது செய்தார்கள். இந்தக் கடத்தல் நாடகத்தின் பின்னணியில், ஈ.பி.டி.பி. அமைப்பினரும், முஸ்லிம் ஆயுத குழு ஒன்றும் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் பழியை புலிகள் மீது போட்டுவிட்டு, புலிகளால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளி உலகிற்கு காண்பிக்க இந்த கடத்தல் நாடகம் மேற்கொள்ளப்பட்டிந்ததாக் கூறப்பட்டது.


சம்பவம்-2
2003ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி நள்ளிரவு ஹுசைன் என்ற 27 வயது முஸ்லிம் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கிண்ணையடி என்ற தமிழ் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓட்டைமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களில் பதட்டநிலை ஏற்பட்டதுடன், தமிழ் முஸ்லிம் கலவரம் ஒன்றும் தோன்றுவதற்கான ஏதுநிலை உருவானது.வழமை போலவே, இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகலாலேயே மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். ஆனால் இந்தக் கொலைச் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரிகள் ஒரு மாதம் கடந்த நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் பற்றிய உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஹுசைன் என்ற அந்த இளைஞன், ஓட்டைமாவடியில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடாத்திவரும் பெண் வைத்தியருடன் காதல் தொடர்புகளை வைத்திருந்தார். அடிக்கடி அவர் ஓட்டைமாவடி வந்து பெண் வைத்தியருடன் தங்கியும் செல்வது வழக்கம். யாராவது கேட்டால், அது தனது உறவுக்காரப் பெண் என்று கூறிச் சமாளித்துவிடுவார்.
அதேவேளை, அந்த பெண் வைத்தியருடன் ஏற்கனவே தொடர்பு வைத்திருந்த ஹஜ்ஜி என்ற ஸ்ரீலங்கா இராணுவ உயரதிகாரி, வைத்தியரின் இந்த புதிய உறவை அறிந்து மிகவும் கோபம் கொண்டார். சரியான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர், 15.05.2003 அன்று ஹுசைனை வான் ஒன்றில் கடத்திச் சென்று கொலைசெய்துவிட்டார்.பிணத்தை ஆட்டோ ஒன்றில் எடுத்துச் சென்று மிராவோடை-கிண்ணையடி வீதியில், தமிழ் பிரதேசத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். தீவிர விசாரணையை மேற்கொண்ட வாழைச்சேனைப் பொலிஸார், இராணுவ அதிகாரி ஹஜ்ஜியையும், ஆட்டோச் சாரதியையும், வேறு சில இராணுவ வீரர்களையும் கைது செய்தார்கள்.ஸ்ரீலங்கா இராணுவத்தின் புலனாய்வு பிரிவில், தமிழ் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருக்கும் கப்டன் ஹஜ்ஜி இந்த கொலையில் சம்பந்தப்பட்டடிருப்பதால்தான், இந்த கொலை பற்றிய சந்தேகம் பெண் பிரச்சனை என்பதைக் கடந்து இரணுவச் சதி என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞனின் பிணம் தமிழ் பிரதேசத்தின் மத்தியில் போடப்பட்டதானது, தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றை தூண்டிவிடும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது என்ற கோணத்தில் ஆராயப்பட்ட பொழுது, இந்த விசாரணைகள் தொடர்பாக சற்று அடக்கி வாசிக்கும்படி விசாரணையை மேற்கொண்ட வாழைச்சேனைப் பொலிஸாருக்கு மேலிடத்தில் இருந்து பலத்த நெருக்குதல்கள் வர ஆரம்பித்தன.



சம்பவம் 3:
21.05.2003 அன்று புதன் கிழமை, விடுதலைப் புலி உறுப்பினரான பூவண்ணன் (காத்தமுத்து கோணேஸ்வரன்) என்பவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் நிந்தவூர் என்ற முஸ்லிம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை கிளர்ந்தெழச் செய்யவும் காரணமாக இருந்தது.கொலை செய்யப்பட்ட பூவண்ணன், விடுதலைப் புலிகளின் தேசியப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர். காரதீவு பணிமணையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். இவர் கொலை செய்யப்பட்டதும், இவரது உடல் தனி முஸ்லிம் கிராமம் ஒன்றின் நடுவில் கண்டெடுக்கப்பட்டதும், விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியிலும் பாரிய சினத்தை ஏற்படுத்தியிருந்தது.எந்த நேரத்திலும் எதுவும் நடந்துவிடலாம் என்று மக்கள் அச்சம் அடைந்திருந்த நேரத்தில், விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல்துறைப் பணியகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. தமிழ், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருங்கள்| என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், காரைதீவில் வைத்து ஈ.பி.டி.பி. கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட பூவண்ணன் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் முஸ்லிம் கிராமமான நிந்தவூரில் போடப்பட்டதாகத்|| தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் குரோதத்தை தோற்றுவித்து இரு சமுகங்களுக்கும் இடையில் இனமோதலை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்கும் நோக்கத்தில் இந்தச் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக|| புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.


சம்பவம் 4
30.11.2001 அன்று ஓட்டைமாவடி, மாவடிச்சேனை போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட தமிழ்-முஸ்லிம் மோதல்களின் பின்னணியில் ஸ்ரீலங்கா அரச படைகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்ததை கல்குடா தொகுதி பள்ளிவாயல் நிறுவணங்களின் சம்மேளணம் பின்னர் அம்பலப்படுத்தியிருந்தது. ஓட்டைமாவடி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து 29.11.2001 கைதுசெய்யப்பட்டிருந்த வாகரையைச் சேர்ந்த மணாளன் மகேசன் என்ற மீன் வியாபாரி மறுநாள் கொலைசெய்யப்பட்டு; பிணமாக முஸ்லிம் பிரதேசமான மாவடிச்சேனையினுள் போடப்பட்டார். இதனைத் தொடர்ந்தே தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஆரம்பமானது. தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தச் செயல் இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக பள்ளிவாயல்கள் சம்மேளனம் தெரிவித்திருந்தது.



சம்பவம் 5:
1990ம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து மட்டக்களப்பைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் இளைஞர்கள் பலரைக் கொலை செய்து ஷடயரில்| போட்டு எரியூட்டியது. இப்படி பல அப்பாவித் தமிழ் மக்கள் காணாமல்போன சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களிடம் பரவலாகப் பேசப்பட்ட ஒரு பெயர் ஷகப்டன் மொனாஸ்| ஆகும். இலங்கை இராணுவத்தில் 1990 ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவில் (Military Intelligence Corps) மட்டக்களப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக செயற்பட்ட |கப்டன் மொனாஸ்| மட்டக்களப்பில் இடம் பெறும் சுற்றிவளைப்புக்களின் போது இராணுவத்தினாரால் அழைத்துவரப்பட்ட மக்கள் முன்பு உரையாற்றும்போது, நான் ஒரு நல்ல முஸ்லிம். அல்லாவைத் தவிர வேறு எவருக்கும் நான் பயப்படமாட்டேன்|| என்று தவறாமல் தெரிவிப்பார்.ஆனால் இத்தனைக்கும் கப்டன் மொனாஸ்| என்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். நீர்கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் பீரிஸ் மார்ட்டின்| என்று பின்னாளிலேயே தெரியவந்தது.


மேலே கூறப்பட்டவை வெறும் உதாரணங்கள் மாத்திரம்தான். வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் வன்முறைகளின் பின்னணியில் சிறிலங்காப் புலனாய்வாளர்களின் சதிக்கரங்கள் இருந்த சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கின்றன. முஸ்லீம் ஜிகாத் அமைப்புகள் ,டக்ளஸ் , கருணா , பிள்ளையான் ,என எண்ணற்ற ஒட்டுக்குழுக்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்தி கொடூரங்கள் செய்ததில் இலங்கை புலனாய்வு துறைக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது . இந்த வேலைகளை UNP யின் ஜே ஆர் ஜெயவர்த்தனா தான் ஆரம்பித்து வைத்தார் .UNP யின் லலித் அத்துலத் முதலி  , ரஞ்சன் விஜரத்தினா தொடக்கம் SLFP யின் கோட்டாபய ராஜபக்சே வரை யாரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல ..

தகவல் மூலம் : நிராஜ் டேவிட்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.