தாய்ப்பால் தானம்... நெகிழவைக்கும் ஃபேஸ்புக் பெண்கள்!
வருகிற 12-ம் தேதி அன்னையர் தினத்தையொட்டி, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 50 அன்னையர் ஒன்றுகூடித் தாய்ப்பால் தானம் வழங்கவிருக்கிறார்கள். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்காக இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள் இரு பெண்மணிகள்.
சென்னையைச் சேர்ந்த பேபிஸ்ரீ, கெளசல்யா ஜெகநாதன் ஆகியோர் அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது தாய்ப்பால் தானம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். இந்தாண்டு வருகிற 12-ம் தேதி அன்னையர் தினத்தை முன்னிட்டு, அன்று ஒரே நாளில் ஃபேஸ்புக் மூலம் பாலூட்டும் அன்னையரை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் தாய்ப்பால் தானம் வழங்கவிருக்கிறார்கள்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, சேலம் மோகன் குமாராலிங்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 5 மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்டோர் தாய்ப்பால் தானம் வழங்கவிருக்கிறார்கள்.

``நாங்கள் கடந்த ஆண்டு, புதிதாகக் குழந்தைபெற்ற தாய்மார்களை இணைத்து ஃபேஸ்புக்கில் ஒரு குழுவை உருவாக்கினோம். அந்தக் குழுவில் குழந்தைகள் பராமரிப்பு குறித்து எழும் சந்தேகங்களையும், அதற்கான ஆலோசனைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறோம். இதில், நான் உட்பட சிலர் தாய்ப்பால் தானம் கொடுப்பவர்களாக இருக்கிறோம். நாங்கள் தானம் கொடுக்கச் செல்லும்போது, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், பிரசவத்தில் தாயை இழந்த குழந்தைகள் எனத் தாய்ப்பால் கிடைக்காமல், குழந்தைகள் பலரும் இறந்துபோவதாக மருத்துவர்கள் கூறியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால், தாய்ப்பால் தானம் கொடுக்க விரும்புவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று முடிவெடுத்தோம். அந்த முடிவை அன்னையர் தினத்தில் தொடங்கினால், நன்றாக இருக்கும் என்பதால் வரும் 12-ம் தேதி அதை முன்னெடுக்கிறோம். தாய்ப்பாலைத் தானமாக கொடுப்பது எப்படி என்று தெரியாதவர்களுக்கு உதவுகிறோம். அதோடு, தாய்ப்பால் கொடுக்க கொடுக்க அதிகமாய் சுரக்குமே தவிர, குறையாது என்பதை அவர்களுக்குப் புரியவைக்கிறோம்" என்கிறார் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான பேபிஶ்ரீ.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை