மறக்கத்தான் முடியுமா!! கவிதை !📷

அல்லோல கல்லோலமாய் ஆப்பிட்டதை
கையில் எடுத்து
இடுப்பில் ஒன்றும் கையில் இரண்டுமாய்
தலையில் சுமையுடன்
பின்னே மிதிவண்டி தள்ளிவந்த கணவன்
வந்த செல்லில் சிதறிவிட பறந்துவந்த
தசைத்துண்டு மூஞ்சையில் அடிந்தச் செல்ல
அவனை அணைத்து அழகூட
காலம் இடம் தரவில்லையே திரும்பினால்
தசைத் துண்டங்கள் பல சிதறியபடி
கைகால் தலை உடல் என தனித்தனியே
பிரிந்து கிடந்ததுவே


பின்னால் வந்த பலர் இந்த உலகிற்கு
விடை கொடுத்திருந்தனர்
கடற்காற்று பேராரவாரமாய் சத்தமிட்டது
சற்றும் எதிர்பாராமல் சத்தங்கள் காதை
பிளந்து கொண்டிந்தது
முன்னேயும் பின்னேயும் புகை மண்டலமாய்
புழுதி கிளம்பிக் கொண்டிருந்தது
தலையில் இருந்த பாரம் காணாமல் போனது
புகை அடங்கமுன்
கடல் அன்னையின் மடியிலிருந்து பல
கோரர்கள் பல் இழித்து பல் குழல் அடித்து
அத்தனை பேரையும் அக்கரையிலே
அடக்கம் செய்தனர்

அனைத்தும் அடங்கும் முன் சிதறிய கூட்டம்
திக்கற்வனை நினைத்து ஓடியது
தேடித்தினம் சோறு தந்தவர்களையும்
தேடியும் காணவில்லை
காவலாய் இருந்தவரும் சிதறியே கிடந்தார்
அனைத்தும் அடங்கியது
அனைவரும் ஒன்று சேர்ந்தால் கூடியிருந்த
எம்மினத்தில் அரைவாசிக்கு மேல்
ஆரையும் காணோம்
என் கையில் இருந்த ஒன்றும் காணாமல்
போனது கண்கலங்க நீரின்றி இருந்தது
இப்ப இடுப்பிலும் கையிலும் என
இரண்டை இழந்து இரண்டுடன்

இழக்கத்தான் இவர்களை பெற்றேனோ
அடி வயிறு ஆடி அடங்கியது
அதன்வலி யாருக்குதான் தெரியும்
ஓமந்தை தாண்டையிலே
தந்த தண்ணி உயிரை வரவழைத்தது
அங்கு நடந்த பாகப்பிரிவினையில் பலர்
பிரிக்கப்பட்டனர் வேங்கை முதல்
வெள்ளைச்சி வரையாக
அதன்பின் அவர்களை இன்றுவரை காணவில்லை

அனைவரும் திறந்த வெளி மந்தையாக
நான்கு பக்க வேலி பண்ணையில் மந்தைகளாக மேய்க்கப் பட்டோம்
அங்கும் பல பிரிப்புகள் நடந்தது
பகல் இருந்தவர் இரவில் என்னமோ காணாமல் போயினர்
இற்றைவரை அவர் எங்கே தெரியவில்லை
பாதுகாப்பு என்ற கூடாரத்தில்
பலர் பதம் பார்க்கப்பட்டனர் பாவிகளால்
யாரிடம் சொல்ல
ஆவதென்ன ஆர்வருவார் எமக்காக
இருந்தவர்களையே காணவில்லை
இனி எவன் வருவான்

காலம் ஓடியது திறந்த வெளிமந்தைகள்
தனித்தனியே விடப்பட்டு பண்ணையும்
மூடப்பட்டதே
கூடியிருந்த கூடே கலைந்தபின் எனக்கென்ன தனிக்கூடு
வாழ வைத்தவனும் வாழ்வின் ஆதாரமும் தொலைத்த பின் எனக்கென ஏதிருக்கு
ஆனாலும் எனக்கன இரண்டிருக்கே
அவற்றோடு என் காலம் கழியயட்டும்
இரண்டை இழந்த நேரங்கள்
கண்ணீரால் சட்டை நனைந்துவிட்டது
சின்னவன் வந்துவிட்டான்

மூன்று வயதில் இடுப்பில் இருந்தவன்
தந்தையுடன் விளையாடவே இல்லை
அவரை அவனுக்கு அவ்வளவாகத் தெரியாதே.........
படத்தைக் காட்ட அதுகூட இல்லையே
மூத்தவன் வளர்ந்துவிட்டான்
அவன் உதவியில் வாழ்க்கை ஓடுது
உடையவன் இல்லாது விடினும்
அவன் நினைவுகள் அகவில்லை
வாழ்ந்த வாழ்க்கை அப்படி

அச்சொட்டாக என்னைப் போன்ற சின்னவன்
அவனையும் தானே இழந்தேன்
மீண்டும் சொந்த இடம் மீண்டென்ன
இருந்த போல் எதுவும் இல்லையே
அந்தக்காலம் அந்த வாழ்வின் வசந்தம்
எங்கே....தொலைந்து....
பத்து வருடம் கலைந்துவிட்டதே
உயிர் உள்ளவரை அவர்களின்
நினைவிருக்குமே.........
இழந்வைகள் கொஞ்சநஞ்சமல்ல
எதற்கு இந்த அழிப்பினைச் செய்தார்கள்
இன்று வரை விடையில்லை....
விடை தர யாருமில்லையே......

அழைப்பு கேட்கிறது.......
கஞ்சியாம் என்று......
பதறியடித்து ஓடுகிறேன்........
கடைசி உயிர் காத்தது.....
அவர்கள் நினைவுடன்...
அதே இடத்தில்...
அதே கஞ்சியுடன்.

வேதியன்
16.05.2019

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.