அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து விஜய் சங்கர்!

அம்பதி ராயுடுவின் சர்ச்சைப் பதிவு குறித்து தற்போது விஜய் சங்கர் பேசியுள்ளார்.


உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் அடுத்த வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சி ஆட்டமே தொடங்கிவிட்டது. ஆனால், இன்னமும் இந்திய அணியின் உலகக்கோப்பை வீரர்கள் தேர்வு குறித்த விவகாரத்தில் புகைச்சல் அடங்கவில்லை. அம்பதி ராயுடு, ரிசப் பன்ட்டுக்குப் பதிலாகத் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றது குறித்து தேர்வுக் குழு விளக்கம் அளித்துவிட்டது. கேப்டன் கோலி விளக்கம் அளித்துவிட்டார். முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துவிட்டனர். இருந்தும் சர்ச்சை அடங்கவில்லை.

முன்னதாக, அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படாததுக்கு விளக்கம் அளித்திருந்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ``விக்கெட் கீப்பிங் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ரிஷப் பன்ட்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அம்பதி ராயுடுக்குப் போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், அவர் சரியாக விளையாடவில்லை. அதேநேரம் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டிங், பீல்டிங், பௌலிங் என மூன்று டைமன்சன்களிலும் (3டி) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அதனாலேயே ராயுவுடுக்குப் பதிலாக விஜய் சங்கரைத் தேர்வு செய்தோம். விஜய் சங்கர், அணிக்குப் பல ஆப்ஷன்கள் கொடுக்கிறார். அவரது பந்துவீச்சு, அணியின் பௌலிங் ஆப்ஷன்களை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் நல்ல ஃபீல்டரும்கூட" என விளக்கம் அளித்தார். இவரின் இந்தப் பதிலை மேற்கோள்காட்டி ``உலகக் கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக 3டி கிளாஸ் ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார் ராயுடு.

ராயுடுவின் இந்தப் பதிவு குறித்து தற்போது விஜய் சங்கர் பேசியுள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், ``ஒரு கிரிக்கெட்டர் உலகக்கோப்பை போன்ற ஒரு தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி உணருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஒரு வீரரின் பார்வையில் அந்த வலி எனக்குப் புரியும். அதேநேரம் ராயுடு என்னைக் குறிவைத்து அப்படிப் பதியவில்லை என்பதும் தெரியும். அந்த நேரத்தில் அவரின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த டுவீட்டை போட்டிருப்பார். அப்போது அவர் என்ன சூழ்நிலையில் இருந்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது" எனக் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.