ஊடகத்தை அடக்கமுனையும் உள்ளூராட்சி மன்றங்கள் -கண்டன அறிக்கை!!

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளுக்கொதிராக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் அண்மைக் காலமாக தமது ஊடகப்பணியினை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களினால் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரினால் பிரதேச ஊடகவியலாளரான கைலாயப்பிள்ளை உருத்திரன் கடந்த வாரத்தில் அச்சுறுத்தப்படுள்ளார்,

அதேவேளை ஓட்டமாவடி – கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் மாதாந்த சபை அமர்வுகளில் சுயாதீனமாக ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புப் பணியினை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் மக்கள் மக்கள் தமது பிரதிநிதிகளினால் உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாமை போன்ற முழு ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது.

மக்களின் குரலாகத்திகழ்கின்ற ஊடகவியலாளர்களின் குரல் நசுக்கப்படுகின்றமை இலங்கை அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற ஜனநாயக உரிமையை மறுக்கின்றமை பாரிய குற்றமாகும்.

இவ்வாறான நிலையில், அரசியல்வாதிகள் விடுகின்ற பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் தவறாகச் சித்தரிப்பதற்கும் புறக்கணிப்பதற்கும் சிலர் இவ்வாறான சபைத் தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.

இதன் மூலம் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படும் நிலை உருவாவதுடன், மக்கள் சரியான தகவல்களை அறிந்து கொள்வதில் பாரிய சிக்கல்கள் உருவாகும் என நாம் அஞ்சுகின்றோம்.

இந்நிலை தொடர்வதனை தவிர்த்து சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்காலங்களில் எமது ஊடகவியலாளர்கள் கௌரவமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும். அதே சந்தர்ப்பத்தில் அவர்களின் பணியினை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்வதற்கு எவ்விதத் தடையையும் ஏற்படுத்த வேண்டாமென பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.