யாழில் வீடுபுகுந்து அட்டகாசம்- சொத்துக்கள் சேதம்!!

தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் ஆயுதக்கும்பல்களின் செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பீதிக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது.


இன்று மாலை யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், பெற்றோல் குண்டை வீசியதோடு அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த குறித்த கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இன்று மதியம் மானிப்பாய் செல்லமுத்து மைதானம் ஊடாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வாள்களுடன் பயணிப்பதை அவதானித்த பொதுமக்கள், மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொது மக்கள் வழங்கியுள்ள தகவல்களையடுத்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இக்கும்பல் நடத்திய தாக்குதல்களில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனால் வடக்கில் செயல்படும் ஆவாக் குழுவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் வழமை போன்று ஆயுதக் குழுக்கள் அட்டகாசம் செய்திருப்பது வடக்கின் பாதுகாப்பினை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.