மூவரை பதவி விலக நிர்பந்தம் செய்தால் அனைவரும் பதவி விலகி தக்க பதிலடி கொடுக்க வேண்டும்-ஹரீஸ் அதிரடி!!

அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் ஆகியோரின்  பதவிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  இதர முஸ்லிம் அமைச்சர்களும் தீர்க்கமான ஒரு முடிவை  எடுத்து இனவாத அடிப்படைவாத சக்திகளிக்கு  நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


தற்போது மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள  நெருக்கடி தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் ,

முஸ்லிம் அரசியல் தலைமைகள் மூவரை பதவி விலகக்கோரி  ரத்தன தேரர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவரது அந்த போராட்டத்திற்கு பௌத்த சக்திகளின் ஆதரவு அதிகரித்து வருவதாக அறிய முடிகிறது.

குறித்த பௌத்த இனவாத  சக்திகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து முஸ்லிம் தலைமைகளை மூவரையும்  பதவியில் இருந்து நீங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படுமாயின் அரசுக்கு  ஆதரவு வழங்கும் இதர முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவிகளை விட்டு விலகி இனவாத சக்திகளுக்கு எமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் இனவாத சக்திகளுக்கு அடிபணிந்து எமது மூன்று அரசியல் தலைமைகளை பதவி விலக நாம் அனுமதிப்போமானால், எதிர்காலத்தில் இதே பாணியில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமூலங்களை கொண்டுவந்து இந்த இனவாத சக்திகள் நிறைவேற்றிக்கொள்ள கூடிய சூழ்நிலை உருவாகும் என்பதை நாம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மூன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளை தனியே பதவி விலக விட்டு அவர்களை தனிமைப்படுத்தி சமூகத்தை இனவாத சக்திகளுக்கு அடிபணிய விடாமல் தடுக்கு பாரிய பொறுப்பு இதர முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.