வைத்தியர் ஷாபி தொடர்பான 210 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!!

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமான விடயங்கள் அடங்கிய 210 பக்க அறிக்கை ஒன்று நீதிமன்றில் நேற்று (27.06.19) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


 குருநாகல் பிரதான நீதவான் முன்னிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியதாக வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விடயமும் உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வைத்தியர் ஷாபிக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடனோ அல்லது வேறு பயங்கரவாத அமைப்புக்களுடனோ எவ்வித தொடர்புமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவரை 500 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் ஷாபி குருணாகல் போதனா வைத்தியசாலையில் 4372 சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.


இதில் 3479 சிங்கள தாய்மார்கள, 860 தமிழ் தாய்மார்கள், 33 முஸ்லிம் தாய்மார்களும் அடங்குகின்றனர்.  அதேநேரம் அவர் சிங்கள மற்றும் தமிழ் தாய்மார்களை சத்திரசிகிச்சை செய்யும் போது சாதாரணமாக செலவிடும் காலத்தை விட குறைந்த காலத்தை செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வைத்தியர் ஷாபி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இதுவரை 615 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதில் 468 சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏனைய 147 முறைப்பாடுகளும் சத்திரசிகிச்சையின் பின்னர் வெவ்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் தாய்மார்களால் செய்யப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.