மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்!!

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் இனங்களுக்கிடையில் சிதைவடைந்துள்ள ஐக்கியத்தை, மீண்டும் கட்டியெழுப்ப மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களினால் இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் அடிப்படைவாதத்தை தோல்வியுறச் செய்து, எதிர்கால தலைமுறைக்காக நாட்டில் சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம், சந்தேகம் மற்றும் நம்பிக்கையீனங்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சமாதானம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதைப்போன்று, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இனிமேல் பயங்கரவாதத்திற்கு நாட்டில் இடமளிக்கப்போவதில்லை என்றும் அதை ஒழிப்பதற்காக அரச அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அதேநேரம் நாட்டின் தேசிய ஐக்கியத்திற்காக அனைத்து சமயத் தலைவர்களினதும் வழிகாட்டலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்துக்கு வரவேண்டும் என்றும் ஜனாதிபதி இம்மாநாட்டின்போது அழைப்பு விடுத்தார்.

அந்த வகையில் மக்கள் மத்தியில் அச்சம், சந்தேகம், நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்தும் அனைவரும் விலகியிருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில் சமயத் தலைவர்கள், முன்னணி அரசியல்வாதிகள் கலந்துகொண்டதுடன், உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளரும் சர்வதேச சங்கத்தின் தலைவருமான கலாநிதி முஹம்மட் பின் அப்துல்லாஹ் கரீம் அலீஷா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.