மக்களும் எதிர்க்கட்சிகளும் எதிர்க்கட்டும் என்றே நடவடிக்கைகளை எடுக்கிறது மோடி அரசு!

காரணம், அதில் அரச பயங்கரவாதத்தை மறைக்கவும் அதனின்றும் மக்கள் கவனத்தை மடைமாற்றவும்தான்!
இல்லையென்றால், வங்கிக் கணக்குடனும் மொபைல் எண்ணுடனும் ஆதாரை இணைக்க அவசர சட்டம் ஏன்?
தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி!

ஆதார் சட்ட திருத்தம் என்று சொல்லி அவசரச் சட்ட மசோதா ஒன்றை நாடாளுமன்ற மக்களவையில் முந்தின நாளன்று (03.07.2019) தாக்கல் செய்தார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மக்களைக் கட்டாயப்படுத்தும் சட்ட திருத்தம் அது. மக்கள் தாங்களாகவே முன்வந்து அவ்விதம் இணைக்காவிட்டால் அதனைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட திருத்தமும் அது.
இதனை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்த்தன. அவசரச் சட்ட மசோதாவாகக் கொண்டுவந்ததை முரட்டுத்தனமான நடவடிக்கையாக வர்ணித்தன. மக்களாகிய நாம் இதனை ஓர் அரச வன்முறையாக, ஏன் அரச பயங்கரவாதமாகவே பார்க்கிறோம்.
காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதுதான்.
இதே பாஜக மோடி அரசின் தொலைத் தொடர்புத் துறை, 2017ஆம் ஆண்டு மார்ச் 23ந் தேதியன்றும் இதேபோல் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தது. உடனே, ‘இந்த உத்தரவு சட்டவிரோதமானது; ஆகவே செல்லாது' என அறிவிக்க வேண்டும்’ என்று சொல்லி, தெசீன் பூனாவாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். லோக் நீதி அறக்கட்டளை என்பதன் சார்பிலும் மோடி அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அவசியமே தவிர, மொபைல் எண், வங்கிக் கணக்கு, நீட் தேர்வு ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை” என்றதுடன், “தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களைப் பெற தடை விதிக்கப்படுகிறது” என்றும் கடந்த 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டின எதிர்க்கட்சிகள். ஆனால் இதற்கு அமைச்சர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (lMF) போன்றவை ஆதார் அட்டை திட்டத்தைப் பாராட்டுகின்றன.”
எப்படி இருக்கிறது? இந்திய மக்கள் உட்கார்த்தி வைத்த இந்த மோடி அரசாங்கத்துக்கு, அந்த மக்கள் ஒரு பொருட்டல்ல; உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியம்தான் முக்கியம்.
உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் கார்ப்பொரேட்டுகளின் சந்நிதானங்கள்! கார்ப்பொரேட்டுகளோ மோடியின் எஜமானர்கள். ஆக, மோடி அரசு யாருக்காக செயல்படுகிறது என்பது புரிகிறதல்லவா!
இவர்களுக்காக எதையும் செய்யும் மோடி அரசு; அது பயங்கரவாதச் செயலாக இருந்தாலும் செய்யத் தயங்காது. இதனை மறைக்கும் தந்திரமும், இதிலிருந்து மக்கள் கவனத்தை மடைமாற்றும் மந்திரமும்கூட தெரியும் மோடி அரசுக்கு! அதற்காகத்தான் நாள்தோறும் மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்கள் அறிவிக்கிறது; அதன்மூலம் தொடர்ந்து மக்களைப் பதற்றத்திலேயே வைக்கிறது.
வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்தும் இந்த சட்ட திருத்தம், ஆதாரில் உள்ள “தனிநபர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும்” தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கே என்பது தெளிபு.
கார்ப்பொரேட்டுகள் கசக்கிப் பிழிந்திட, அரசே தன் மக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் இந்த செயல், மனித உரிமை மீறல் குற்றமாகும். எனவே, இது அரச பயங்கரவாதமன்றி வேறென்ன?
இந்த அரச பயங்கரவாதத்தை மறைக்கவும் அதனின்றும் மக்கள் கவனத்தை மடைமாற்றவும்தான் மக்கள் மத்தியில் தொடர்ந்து பதற்றம் உருவாக்கப்படுகிறது.
அதற்காகத்தான் மக்களும் எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்றே நடவடிக்கைகளை எடுக்கிறது மோடி அரசு!
இல்லையென்றால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிராக, வங்கிக் கணக்குடனும் மொபைல் எண்ணுடனும் ஆதாரை இணைக்க அவசர சட்டம் ஏன்?
தமிழக வாழ்வுரிமை கட்சி கேள்வி!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.