நீதிமன்ற கூடத்தினுள் கழுத்தை அறுத்த நபர்!!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் வைத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.


குறித்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபருக்கு எதிராக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் அவரது உடமையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அதனால் சந்தேகநபர் கடந்த ஜூலை 5ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேகநபர் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டார்.

அதன்போதே தான் வைத்திருந்த பிளேட் போன்ற கூரிய ஆயுதத்தால் சந்தேகநபர் தனது கழுத்தை அறுத்துள்ளார்.

அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல சிறைச்சாலை வாகனம் வர சுமார் அரை மணிநேரம் தாமதமானது. அதனால் சந்தேகநபரின் தாயார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குள் பெரும் சத்தமிட்டு குரல் எழுப்பியுள்ளார்.

எனினும் பொலிஸார் அவரை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று நீதிமன்றில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கும் நோக்குடன் ஹெரோயினை அவரது உடமைக்குள் திணித்து சோடிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக சந்தேகநபரின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.