நடிகர் சங்கத் தேர்தல்: திடீர் திருப்பம்!

சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதிட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022ஆம் ஆண்டுக்கான தேர்தல், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. பொதுச்செயலாளர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் விஷாலும், சங்கரதாஸ் அணி சார்பில் ஐசரி கணேஷும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடம் இருந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி கல்யாண சுந்தரம் முன் பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த அக்டோபர் 3ஆம் தேதி, நீதிபதி கல்யாண சுந்தரம் முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக அக்டோபர் 15(இன்று)முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதன்படி இன்று(அக்டோபர் 15) இவ்விசாரணை நடைபெற்றது. விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீத உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, கடந்த 5ஆம் தேதி தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என வாதிட்டார்.
மேலும், நடிகர் சங்க விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. நிர்வாகிகளுக்கு 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்ய நடிகர் சங்க விதிகளில் இடமில்லை. எனவே, சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என தெரிவித்தார். மேலும் நடிகர் சங்கத் தேர்தல் நடைமுறைகளில் அரசு தலையிடவில்லை என விஷால் தரப்பு வழக்கறிஞர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தல், உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான வழக்குகளை வரும் அக்டோபர் 18ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.