மகாராஷ்டிரா, ஹரியானாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 5 புள்ளி 7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானாவில் 8 புள்ளி 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 3,237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பை பெருநகரில் மட்டும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மும்பையில் வாக்குப்பதிவு டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், காவல்துறையினர், மத்தியப் படையினர் என 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று, 90 தொகுதிகளை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்திலும், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான ஆமீர் கான், மும்பையில் மேற்கு பந்தராவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். இதுவரை இல்லாத அளவாக, அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு சதவிகிதம் அமைந்திடும் வகையில், மகாராஷ்டிராவின் அனைத்து வாக்காளர்களும், மிகுந்த ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும் என ஆமீர் கான் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, தனது மனைவியும், நடிகையுமான லாரா தத்தாவுடன் வந்து, மும்பையின் மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்களித்தார்.
ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில், புதிய வரவாக வந்திருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி, இம்முறை வாக்குப்பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் செளதாலா மற்றும் அவரது குடும்பத்தினர், டிராக்டரில் மூலம் வந்து, சிர்சாவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மாரத்வாடா (Marathwada) மண்டலத்திற்குட்பட்ட லத்தூர் (Latur) மாவட்டத்தின் பல பகுதிகளில், கனமழை பதிவாகி வரும் நிலையில், வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழைக்கிடையே, குடைபிடித்தபடி வரும் வாக்காளர்கள், தங்களது வாக்கினை பதிவு செய்து செல்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாக்பூர் மத்திய தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தங்களது அடிப்படை பிரச்சினைகளை புரிந்து, அதனை தீர்த்து வைக்கும், மக்கள் பிரநிதிகளை, வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்,(Manohar Lal Khattar) கர்நால்(Karnal) நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். சைக்கிளில் வந்த ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்..
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஏற்கனவே, தோற்றுவிட்ட காங்கிரஸ் கட்சி, ஒருபோதும் வெற்றிபெறாது என்றார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாக்கினை பதிவு செய்தார். மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்ற புரோஹித் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் (Devendra Fadnavis), மனைவி அம்ருதா(Amruta), தாயார் சரிதா(Sarita) ஆகியோருடன் சென்று, நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்-கின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக், மனைவியும், நடிகையுமான ஜெனிலியா டிசோசாவுடன் வந்து, லத்தூரில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தார். 
"ஏக் தோ தீன்" பாடல் புகழ் நடிகை மாதூரி தீட்சித், மும்பையில் மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை பதிவு செய்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலே, புனே அருகில் உள்ள பாராமதி (Baramati) நகரில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல், தனது மனைவி வர்சாவுடன் சென்று, கோண்டியா (Gondia) நகரில், வாக்களித்தார்.
மும்பையின் கிழக்கு பந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தனது மனைவி ராஷ்மி (Rashmi), மகன்கள் ஆதித்யா மற்றும் தேஜாசுடன் (Aditya & Tejas) வந்து, வாக்கினை பதிவு செய்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரே, ஒர்லி (Worli) சட்டப்பேரவைத் தொகுதியில், போட்டியிடுகிறார்.
மும்பை மேற்கு பந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன் ஆகியோர் வாக்கினை பதிவு செய்தனர். பின்னர் பேசிய சச்சின் டெண்டுல்கர், வாக்காளர்கள் அனைவரும், தவறாது தங்கள் வாக்கினை பதிவு செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.