தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவமும், குழுக்களின் குழு தத்துவமும்.!!

ஒரு குழுக்களின் குழுவில் தலைமையின் முதற் கடமை என்பது அமைப்பு செழிப்பதற்கான பண்பாட்டு சூழலை உருவாக்குவதுதான், சதுரங்க ஆட்டத்தைப்போன்று  காய்களை  நகர்த்துவது அதற்குப்பின்புதான்  வரும். பிரபாகரன் அவர்களின் செயல்பாடுகளை  கூர்ந்து கவனித்தால் இத்தன்மை விளங்கும். அவர்தான் இயக்கத்திற்கு அடிப்படையான புலிப்பண்பாட்டை உருவாக்கினார் .
 ( இது இன்னொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது [2] ).

நெருக்கமான குழுக்களை கட்டி அமைத்தார். பல படையணிகளை உருவாக்கி இணைத்தார். வலைப்பின்னலை உலக அளவில் பெரிதாக்கினார். தொடர்ந்து இயக்கத்தின் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் காத்தார். அவரின் பேச்சும் செயலும் எப்பொழுதும்  ஒத்திருக்கும், முரண்கள் இருக்காது. ஈழத்திலிருந்து பின்வாங்கினால் தன்னை சுட்டு விடுங்கள் என்று கூறியது, தனது குடும்பத்தை இறுதிவரை களத்திலேயே வைத்திருந்தது, எளிமையாக வாழ்ந்தது, முன்னின்று போர் புரிந்தது  என்று மற்ற வீரர்களுக்கு முன்னதாரணமாக திகழ்ந்தார்.


அவர் உருவாக்கிய சூழலில் நூற்றக்கணக்கான திறமையான தளபதிகளும், ஆயிரக்கணக்கான ஓர்மை கொண்ட புலிவீரர்களும் உருவாகினர். புலிப்படை என்பது பிரபாகரன் என்ற தோட்டக்காரர் உருவாக்கிய விளைச்சல், ஒர்  அதியுச்ச திறமை கொண்ட  குழுக்களின் குழு.  அவர்களைப்போன்ற சிறந்த உறுதியான குழுக்களை வேறு யாரும்  இதுவரை உருவாக்கி இருக்கிறார்களா என்பது சந்தேகமே.  இதுதான் இருப்பதிலேயே பிரபாகரன் அவர்களின் முக்கியமான தலைமைச் செயல்பாடு. போர் உத்திகள் வகுப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதை அவரின் படைத்தளபதிகளே பெரும்பாலும் பார்த்துக்கொள்வார்கள்.


காலப்போக்கில் எத்தனையோ மிச்சிறந்த தளபதிகளை இழந்தாலும், புலிகள் இயக்கம் சரியவில்லை. மேலும் அதிகமாக புதிய தளபதிகள் வளர்த்தெடுக்கப்பட்டு இயக்கம் முன்னேறிச்சென்றது. புலிகள் இயக்கம் மீளெழும்பும் (Resilient) இயக்கம், நொறுங்கும் (fragile) இயக்கம் அல்ல.


பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவ்வியக்கம் தொடர்ந்திருக்கும் என்று ஆய்வாளர் தராகி சிவராம் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இது ஏனென்றால் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக்கொண்டு இறுக்கமான நம்பிக்கையுடன் ஒரு பண்பாட்டின் மூலம் செயல்படுவார்கள்.  தலைவர் குறிக்கோளை மாற்றவேண்டும் என்று நினைத்தாலும், குழுக்கள் விடமாட்டார்கள்.


அவ்வாறான தலைவரை நம்பிக்கை துரோகியாகவே பார்த்து தலைமையை மாற்றிவிடுவார்கள். குழுக்களின் குழுவில் பிரபாகரன் போன்று “குறிக்கோளிலிருந்து நான் விலகினால் என்னை  சுட்டுவிடுங்கள்” என்று கூறுபவர்தான் தலைவராகவே இருக்க முடியும்.  தலைவர் என்பவர் அவ்வாறான குழுக்களை உருவாக்கத்தான் தேவை. அதன் பின்பு அது தனக்கென்று ஒரு உயிர் பெற்றுவிடும்.


அதை எந்த ஒரு தனி ஒருவானாலும் திசை மாற்றமுடியாது. நமது உடலில் காயம் பட்டால் எவ்வாறு உடல் சரி செய்து கொள்கிறதோ, அதுபோல ஏற்படும் பிழைகளை இழப்புகளை அதுவே சரி செய்து கொள்ளும். குறிக்கோளை விடாப்பிடியாக நிற்காமல் துரத்தும். இதுதான் 21-ஆம் நூற்றாண்டுக்கான அமைப்புகளின் வடிவமைப்பு.


“The future will take the form of organic networks, resilience engineering, controlled flooding, a world without stop signs.” [1]

புலிப்பண்பாடு  நிற்கும்வரை புலிகளை அழிக்க முடியாது,  இழப்புகளை ஈடுகட்டி மீளெழும்பும் . அப்படியென்றால் ஏன் 2009-இல் இயக்கம் நொறுங்கியது என்று கேள்வி எழும். மாறிய உலகச்சூழலினால் போரில் பின்னடைவு ஏற்பட்டபொழுது, இயக்கம் அழியாமல் இருக்கவேண்டுமானால், சிறுசிறு குழுவாக பிரிந்து செயல்படவேண்டும்,


ஆனால் அதற்கேற்றபடி நிலப்பரப்போ, மக்கள் நிறைந்த நகர்புறமோ கிடையாது. மேலும் எந்த வாய்ப்பும் இன்றி மக்களையும் சேர்த்து சிங்களம்  இனப்படுகொலை செய்தது. முடிவில் புலிகளின் புலிப்பண்பாடு ஈழத்தில் முடிவுக்கு வந்தது. அதன் மூலம் புலிகள் மீளெழும்  தன்மையை இழந்தனர்.


புலிகளை  அழிப்பது அவ்வளவு எளிதானது  அல்ல. அது  இந்தியாவாலோ சிங்களத்தாலோ முடியாத காரியம்.  புலிகள் எதிரிகளைவிட மிகச்சிக்கலான அமைப்பு   ஒரு உலக வலைப்பின்னலை உடைக்க இன்னொரு உலக வலைப்பின்னலால் மட்டுமே உடைக்க  முடியும்.   முடிவில் ஒரு பெரிய உலக நாடுகளின் கூட்டு சதியால் உருவாக்கிய வலைப்பின்னலே  புலிகளை அழித்தது.


புலிகளுக்கு நேர் மாறானது திராவிட இயக்கங்களின் கட்டமைப்பு. ஒரு தலைமை திட்டமிட்டு அனைத்தும் செய்யப்படும். விளைவு என்னவானது? தலைமைகள் தவறான கைக்கு சென்றன, அல்லது தலைவரின் ஆணையால் குறிக்கோள்கள் திசை திரும்பின. திராவிட இயக்கங்களின் சிக்கல் என்பது “கட்டமைப்பு” சிக்கல். எந்த தலைமை வந்தாலும் “மேலிருந்து கீழாக” கட்டமைக்கப்படும் அமைப்புகள்,  காலப்போக்கில் இப்படித்தான் அது முடியும். 


திராவிடம் அழிவதற்கு எதிரிகள் தேவையில்லை. அவர்களின் தலைமைகளை அக்காரியத்தை சிறப்பாகச் செய்கிறார்கள். மேக்கிரிசுட்டல்  கூறிய எந்த ஒரு தலைமைப் பண்பும் அவர்களிடம் இல்லை. இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் வளரவேண்டுமானால்  தலைமைப் பண்புகளை பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும், திராவிடத்திலிருந்து அல்ல. ஆனால் என்னவோ தமிழ்த்தேசிய இயக்கங்கள் திராவிட சாயலிலேயே கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன.


இந்தியா-புலிகள் இடையேயான போரில், புலி வீரர்களின் எண்ணிக்கை 2000, ஆனால்  இந்தியப்படைகள்  100,000 படைவீரர்களையும் விமானப் படையையும்  கப்பல் படையையும் கொண்டிருந்தது. அப்படி இருந்தும்  இந்தியப்படைகள் இலக்கை எட்ட முடியாமல் பின்வாங்கியது. இது எப்படி நடந்தது?


புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் கொரில்லா தாக்குதல் நடத்தினார்கள். ஒவ்வொரு குழுவுக்கும்  அவ்வாறான அதிகாரம் இருந்தது. 2000 பேர் 100,000 பேரை எதிர்கொள்ள வேண்டுமானால், தங்களது ஆற்றலை 50 மடங்கு அதிகரிக்கவேண்டும். அதை குழுக்களின் குழுவால் மட்டுமே முடியும். மாறாக ஒரு தலைமை மேலிருந்து திட்டமிட்டு மற்றவர்கள் அதைப் பின்பற்றி சாதிக்க முடியாது.


சிங்களப்படை வருடக்கணக்கில் நகர்வுகளை மேற்கொண்டு புலிகளின் இடங்களைப் பிடிக்கும். ஆனால் புலிகள் அவற்றை ஓயாத அலைகள் போன்ற நடவடிக்கைகள்  மூலம் சில வாரங்களில் பிடித்து விடுவர். இது எப்படி சாத்தியமானது?   சிங்களப்படை மேலிருந்து கீழாக இயங்கும் படை. உயர் தளபதி கட்டளை இடுவார், அதை கீழுள்ளவர்கள் நிறைவேற்றுவர். ஒவ்வொரு நகர்வுக்கும் மேலதிகாரியின் உத்தரவுக்கு காத்து நிற்பர்.



ஆனால் புலிகளின் படைகள் கீழிருந்து மேலாக நெருக்கமான குழுக்களால் கட்டி எழுப்பப்பட்டது. எப்படி ஒரு  கால்பந்தாட்ட அணியில் வீரர்கள் களநிலவரத்தை அறிந்து தாமாக  வேகமாக நகர்வார்களோ, அதுபோல புலிப்படைகள்  நகரும். படை நகர்த்தும் தளபதிகளுக்கும் பிரபாகரனுக்கும் நெருக்கமான நட்பும் நம்பிக்கையும், ஒருவருக்கு  இன்னொருவரைப் பற்றிய தெளிவான புரிதல் இருப்பதாலும், கள நிலவரத்திற்கேற்றபடி எவ்வாறு நகரவேண்டும் என்று அவர்களுக்கு தானாகவே தெரியும்.


 அவர்களுக்குள் மணிக்கணக்கில் பேசி விளங்க வேண்டியதில்லை. ஒருவரின் நகர்வுகளிலிருந்து மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று தானாகப் புரிந்துகொள்வார்கள். இதனால் அதிவேகமாக புலிப்படைகள் நகர்ந்தன. சிங்களப்படைகள் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்து நின்றதால் மெதுவாக நகர்ந்தனர். அவர்களுக்கு உத்தரவு வரும் முன் புலிகள் களநிலவரத்தையே மாற்றி  பெருங்குழப்பதை உருவாக்குவர்.


 முடிவில் புலிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றனர். எப்படி நெல்சனின் தளபதிகள் ஒவ்வொருவரும் நெல்சனாக செயல்பட்டார்களோ [1,4], அப்படியே புலிகளின் ஒவ்வொரு தளபதியும் பிரபாகரனாக செயல்பட்டார்கள். என்னுடைய ஊகம் என்னவென்றால் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துதான் தளபதிகள் போரின் நடுவில் ஒவ்வொரு அடியும் எடுக்கவேண்டும் என்பதல்ல.


களத்தில்  உள்ள தளபதிகளுக்குத்தான் களநிலவரம் நன்கு தெரியும் என்பதால், நகர்வுகளை அவர்களே மேற்கொள்ளும்  அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்.  அவ்வாறு இல்லையென்றால் புலிகளால் அவ்வளவு வேகமாக நகர்ந்திருக்க முடியுமா என்பது  சந்தேகமே. ஆனாலும் இது உறுதி செய்யப்படவேண்டும்.
.

புலிகள் போர் உத்திகளில் முன்னோடிகளாக இருந்தாலும், அவர்களின் உண்மையான பலம் அதுவல்ல. அவர்களின் பலம் என்பது புலிப்பண்பாடும், அவர்கள் குழுக்களின்  குழுவாக இறுக்கமான நட்பினாலும் நம்பிக்கையினாலும் கட்டி அமைக்கப்பட்டிருந்தது தான். அவர்களின் கூட்டு பலம் என்பது  தனி உறுப்பினர்களின் பலத்தின் கூட்டலை விட அதிகம் (As a team they were more powerful  than the sum of the parts). இதை மற்ற இயக்கங்களில் காண முடியாது. இது சிக்கலான அமைப்புகளின் (Complex systems) ஒரு தன்மை.  புலிகள் உண்மையிலேயே புரிந்து கொள்வதில் கடினமான சிக்கலான அமைப்பு.


இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் பலமடங்கு வலிமை பெறவேண்டுமானால், புதிய உத்திகளைத் தேடுவதைவிட தங்களது அமைப்புகளை புலிகளைப்போன்று குழுக்களின் குழுவாக  அமைப்பு மாற்றத்தை உருவாக்கவேண்டும்.   இனிமேல் ஒரு நல்ல தலைமையைத் தேடுகிறோம் என்றால், அவர்கள் கட்டளை இடுபவராக இருக்கக்கூடாது.


அவர் புலிப்பண்பாட்டை இன்றைய தேவைக்கேற்ப உருவாக்கி, நெருக்கமான நம்பிக்கையினால் இணைக்கப்பட்ட குழுக்களை உருவாக்குகிறாரா என்று பார்க்கவேண்டும். தெளிந்த சிந்தனையும், சிறந்த முன்னதாரணமாகவும், நெறிதவறாதவராகவும்  இருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.

இன்றைய  தமிழ்த்தேசிய இயக்கங்கள் குழுக்களின் குழு  முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது இன்னொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது [4].

புலிகள் பல நெருக்கமான குழுக்களின் குழுவாக இருந்ததால், தேவைக்கேற்ப விரைவில் உருமாறிக்கொள்ளும் தன்மை கொண்டவராக இருந்தனர். பொதுவாக பெரும்பாலும் பல குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்தினாலும், பெரிய தாக்குதலுக்கு உடனடியாக  பெரும்படையாக உருமாறுவர்.  அதனால் அவர்கள் கொரில்லாப் படைகள் போன்றும் போரிடுவர், மரபுவழிப்படையாகவும் போரிடுவர். தேவைக்கேற்ப உருமாறிக்கொள்வர்.  இவ்வாறு தேவைக்கேற்ப மாறுவது குழுக்களின் குழுவால் மட்டுமே முடியும் [1]. 


அதுபோன்ற அமைப்புகளே  பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம். இத்தன்மை  மேலிருந்து கீழாக செயல்படும் அமைப்புகளுக்குக் கிடையாது.
பிரபாகரனை சிலர் சர்வாதிகாரி என்று பார்க்கின்றனர். இது தலைவரை ஒரு கட்டளை இடும் அதிகாரியாகப் பார்ப்பதினால் வரும் பிழை. பிரபாகரன் அவர்கள் அதிகாரத்தை தளபதிகளிடம் பகிர்ந்தளித்து குழுக்களின் குழுவாக செயல்பட்டவர்.


அவரின் முக்கிய வேலை என்பது தோட்டக்காரர் போன்றது, கட்டளை இடுவது அல்ல. புலிகள் அனைவரும் ஒரு குறிக்கோளில் ஒரே உணர்வுடன் நம்பிக்கையுடன் செயல்பட்டவர்கள். சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன்தான். ஒருவருக்கு என்ன ஆபத்தோ, அதேதான் அனைவருக்கும். இங்கு சர்வாதிகாரம் எங்கிருக்கிறது?


சொல்லப்போனால் திராவிட இயக்கங்களுக்குத்தான்  சர்வாதிகாரம்  நன்றாகப் பொருந்தும். தலைவர் தனது சுயநலத்திற்காக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன ஆட்டம் வேண்டுமானாலும் ஆடுவார்.



குழுக்களின் குழு முறை என்றுமே மேலிருந்து கீழாக இயங்கும் முறையை விட  சிறந்த சனநாயகம். புலிகளின் ஆற்றல் என்பது   குழுக்களின் குழுவில் உள்ளடங்கிய சனநாயகப் பண்புகளிலிருந்தே வருகிறது.  ஒரு இயக்கம் தேர்தலில் போட்டி இடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம் பகிரப்படுகிறது என்பதே சனநாயகப் பண்புகளை தீர்மானிக்கிறது.
.

குழுக்களின் குழுவில் விரைந்த சோதனைகளும் கற்றலும் நடக்கும், அமைப்பு வெகு வேகமாக வளரும். இதனால்தான் புலிகள் இயக்கம் தோன்றியதிலிருந்து விரைந்து கற்று அசுரவேகத்தில் வளர்ந்தனர். மேலிருந்து கீழாக இயங்கும் அமைப்பில் அனைத்தும் மெதுவாகவே நகரும். கற்றலே இல்லாமல் தேங்கும் ஆபத்தும் ஏற்படும். இன்று திராவிட இயக்கங்கள் அதுபோன்ற தேக்கநிலையிலேயே பல பத்தாண்டுகளாக உள்ளன. இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கங்களும் இதுபோன்ற மந்த நிலையை அடைய வாய்ப்பிருக்கிறது.



அவர்கள் வெகுவேகமாக வளரவேண்டுமானால், தங்களை புலிகளைப் போன்று மறுசீரமைத்து கற்றலுக்கு சோதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.


புலிகள் இயக்கத்திலிருந்த அனைவரும் ஒற்றைக் குறிக்கோளைக் கொண்டு, இறுக்கமான நம்பிக்கை கொண்டு, ஒரே சிந்தனையுடன் ஓருயிராக புலிப்பண்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட  குழுக்களின் குழு. மெக்கிரிசுட்டல் அவர்கள்  இந்த அமைப்பு முறையை  கற்றது   ஈராக்கின் குழுக்களிடமிருந்து என்று கூறினாலும், ஆழ்ந்து ஆராய்ந்தால் இதை முதன்  முதலில் நடைமுறைப்படுத்தி மாபெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள் புலிகள்தான். மெக்கிரிசுட்டல் இந்த அமைப்பு முறையை புரிந்துகொண்ட காலம் 2004-2006 ஆண்டுகளில் [1].


அப்பொழுதான் குழுக்களின் குழு முறைக்கு எதிர் உத்திகளை வகுத்தார். இந்த பொறிமுறைகள் சிங்களத்திற்கு இறுதி யுத்தத்தில் கற்பிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறோம் [3].


பிரபாகரன் அவர்கள் அதி புத்திகூர்மை கொண்ட தலைவர். போர் உத்திகளில் மட்டுமல்ல, எவ்வாறு சிறந்த அமைப்புகளை உருவாக்குவது என்பதிலும் முன்னோடியாக இருந்தவர். நாம் புலிகளிடமிருந்து   கற்பது என்பது என்றும் முடிவுறாததாகவே இருக்கும். நான் “ஈழப்போரிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்” என்ற தொடரை எழுதி முடித்தபின், ஓரளவு  முக்கியமான அனைத்து உத்திகளையும் கண்டறிந்துவிட்டேன் என்றே நினைத்தேன், ஆனால் இக்கட்டுரையை எழுதும் பொழுதுதான் எவ்வளவு பெரிய ஓட்டை விட்டிருக்கிறேன் என்பது புலப்படுகிறது.


பிரபாகரன் அவர்களையும், புலிகளையும், ஈழப்போரையும் என்றுமே யாராலும் முழுதாகப் புரிந்துகொள்ள முடியாது. புதுப்புது தத்துவங்களின் வழியாகப் பார்க்கும்பொழுதே, நமது பார்வை மேலும் விரிவடையும். ஈழப்போர் நமக்கு தொடர்ந்து பாடங்களை கற்பித்துக்கொண்டே இருக்கும்.

சுபார்ட்டாவுக்கும் ஏதென்சுக்கும் இடையே 27 ஆண்டுகள் நடந்த (431-404 BC) பெலோப்பினீசியப் போரை வரலாறாக எழுதிய துசிடிடிசு,   அப்போரை “அனைத்து காலத்திற்குமான பொக்கிசம்”  ( A possession for all time) என்று வர்ணித்தார் [5,6]. விருப்பு வெறுப்பின்றி உள்ளதை உள்ளபடியே, எந்த உணர்வுகளுக்கும் பாரபட்சத்திற்கும் இடமளிக்காமல் போர் வரலாற்றை எழுதினார். அந்நூல் இன்றும்  உலகப் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் படிக்கப்படுகிறது, அதிலிருந்து புதுப்புது பாடங்களை இத்தனை ஆண்டுகள் கழித்தும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். வரலாறு என்பது மீண்டும் மீண்டும் திரும்பும்;


அப்படியே இல்லாவிட்டாலும் அது பழமையின் சாயலிலே தோன்றும். அதனால்தான் வரலாற்றைக் கல்லாதவர்கள் மீணடும் அதே தவறை இழைப்பார்கள். ஈழப்போர் என்பது உலகத்திற்கு பொக்கிசமா எனபதை காலம்தான் சொல்லவேண்டும். ஆனால் என்னால் ஒன்றை உறுதியாகக் கூறமுடியும். ஈழப்போரும் புலிகளின் வரலாறும்  நாம் என்றென்றும்  கற்றுக்கொள்ள வேண்டிய ஈடு இணையற்ற பொக்கிசம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.