கைதி: இருளின் விடியல்!
வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்துடன் ரிலீசாகிறான் ‘கைதி’. கார்த்தி நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது கைதி.
நாயகனுக்கான சினிமாவாக இருந்தாலும் சரி, கதைக்கான சினிமாவாக இருந்தாலும் சரி, தனக்கான சினிமாவை சரியாக தேர்ந்தெடுப்பதில் கார்த்தி எப்போதும் தனித்துவமானவர். படம் முழுவதும் ஒரே உடை, தோற்றம், இரவில் மட்டுமே அமைந்த காட்சிகள், ‘ரிஸ்க்’கான சண்டைக்காட்சிகள் என ஒரு நாயகனுக்கான அனைத்து சவால்களும் நிரம்பியுள்ள கைதியை தேர்ந்தெடுத்திருக்கும் விதமே பாராட்டுக்குரியது. கடைக்குட்டி சிங்கம், தேவ் என வெவ்வேறு பயணங்களில் இருந்த கார்த்தி, ‘கைதி’யின் மூலம் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை வெளிப்படுத்த வந்திருக்கிறார்.
கைதி திரைப்படத்தின் நாயகன் கார்த்தியின் அனுபவங்கள்
’கைதி’ படத்துக்காக 36 இரவுகள் படப்பிடிப்பு நடந்தது. மிகக் கடுமையாக இருந்தன அந்நாட்கள். நினைத்துப் பாருங்கள், காலை 3 மணிக்கு எழுந்து சண்டைக் காட்சிகளில் நடிக்க உடல் தயாராக இருக்க வேண்டும். கடும் குளிர் வேறு இருந்தது. ‘கைதி’ படத்தின் திரைக்கதை இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்யும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன். இது ஒரு பயணம் பற்றிய படம்.
ஓர் இரவில் நடக்கும் கதை. அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இப்படி நடந்தால் என்ன ஆகும் என்பது மாதிரியான படம். அவ்வளவு விறுவிறுப்பான முறையில் லோகேஷ் கனகராஜ் இதை எழுதியிருக்கிறார். நான் கல்லூரியில் படிக்கும்போது இது போன்ற படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன். அதனால் எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
நான்கு மணிநேரத்தில் நடக்கும் கதை. ’ஸ்பீட்’, ’டை ஹார்ட்’ போன்ற படங்களைப் பார்க்கும்போது அதில் பாடல்களுக்கு எங்கு நேரம் இருக்கும்? 2 முதல் 3 வருடங்கள் நடக்கும் கதை என்றால் அதில் பாடல் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தீவிரமான படம். அதை சரிகட்ட காதல் காட்சிகள் தேவைப்பட்டன. அது இல்லையென்றால் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பயங்கரமான படமாகத் தெரிந்திருக்கும். ஆனால் ‘கைதி’யில் அது தேவைப்படவில்லை. படத்தில் பரபரப்பு இருந்தாலும் மக்கள் ரசிக்கும் வகையில் மென்மையான தருணங்களும் இருக்கும்'' எனக் கூறினார்.
இப்படத்தில் கார்த்தி 10 வயதுப் பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார். 10 வருட சிறைவாசம் அனுபவித்த கதாபாத்திரத்தில், இதுவரை தனது பெண் குழந்தையைப் பார்க்காத ஏக்கத்தில் இருக்கும் கார்த்தியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என கைதியின் நாயகன், நம்பிக்கையோடு ரசிகர்களின் வார்த்தைகளுக்காக காத்திருக்கிறார்.
இது குறித்து கூறும் போது, “எனக்கு இப்போது மகள் இருக்கிறாள் என்பதால் என்னால் அந்த உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு குழந்தை இருக்கும்போது, அந்தக் குழந்தைதான் உங்களுக்கு எல்லாமுமாக இருக்கும்" என்று கைதியின் கதாபாத்திரம் எவ்வாறு தனக்கு நெருக்கமானது என தன் அனுபவத்தை கார்த்தி விளக்குகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: சத்யன் சூரியன், படத்தொகுப்பு: பிலோமின் ராஜ், சண்டைபயிற்சி: அன்பறிவ், கலை: என்.சதீஷ் குமார், வசனம்: பொன் பார்த்திபன்&லோகேஷ் கனகராஜ்.
இன்று ரிலீசாகிறான் ‘கைதி’
கருத்துகள் இல்லை