விபத்தை தடுத்த விமான நிலைய ஊழியர்!

அமெரிக்காவின் சிகாகோ நகர விமானநிலையத்தில் ஏற்படவிருந்த விபத்தை உரிய நேரத்தில் சாதுரியமாக தவிர்த்த பணியாளரை அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஓஹரே சர்வதேச விமான நிலையம் உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி விமான நிலைய சேவைகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த விமானம் ஒன்றில் தூய்மை மற்றும் உணவுகள் அடுக்கும் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. விமானம் நிறுத்துமிடம் பகுதியில் இப்பணி நடந்து கொண்டிருந்த போது விமானத்தின் அருகே குளிர்பானங்கள் கொண்டு செல்லும் ஒரு வாகனம் நின்றுள்ளது. அந்த வாகனத்தில் ஓட்டுநர் இஞ்சினை நிறுத்தாமலேயே இறங்கிச் சென்றுள்ளார். அப்போது வாகனத்தில் இருந்து குளிர்பானங்கள் சரிந்து அக்சலரேட்டர் இருக்கும் பகுதியில் விழுந்துள்ளது,
இதனால் அந்த குளிர்பான வாகனம் சங்கு சக்கரம் போல் பின்னோக்கி சுழன்று ஓடியுள்ளது, இதைச் சற்றும் எதிர்பாராத விமான நிலைய பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது வேகமாக ஓடி வந்த விமான நிலைய பணியாளர் ஜார்ஜ் மணலாங் அருகில் இருந்த மற்றொரு வாகனத்தை எடுத்து சுழன்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி நிறுத்தியுள்ளார்.
அருகில் இருந்த விமானத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓடிக்கொண்டிருந்த அந்த வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலரும் ஜார்ஜ் மணலாங்வுக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சரியான நேரத்தில் செய்யப்பட்ட நல்ல காரியம்’ என்று பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் விமான நிலைய ஊழியர்கள், இதுபோன்று இனி ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.