விஜிபி குழுமத்தினர் மீது நிலமோசடிப் புகார்!

விஜிபி குழுமத்தின் பங்குதாரர்களில் ஒருவரான விஜி பன்னீர்தாஸின் மகன்கள் மீது நிலமோசடிப் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது கர்நாடக காவல்துறை. தமிழகத்தின் முன்னணி தொழில் குடும்பங்களில் ஒன்றான விஜிபி குடும்பத்தினர் நிலமோசடிப் புகாரில் சிக்கியுள்ளனர். விஜிபி குழுமத்தின் பங்குதாரர்களில் ஒருவரான விஜி பன்னீர்தாஸின் மகன்கள் ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ். விஜிபி சகோதரர்கள் சென்னையில் ஒற்றுமையாக கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் சொத்துப் பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜி பன்னீர்தாஸின் இரண்டாவது சகோதரர் விஜி செல்வராஜ். இவரது மகன் வினோத் ராஜ்க்கு சொந்தமான நிலத்தை விஜி பன்னீர்தாஸின் மகன்கள் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குடும்ப சொத்தை பாகப் பிரிவினை செய்ததில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவைச் சேர்ந்த பிஎம் கவால் கிராமத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் நிலம் விஜிஎஸ் வினோத்திற்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காலாவதியான ‘பவர்’ பத்திரத்தை பயன்படுத்தி, அதன் மூலம் சுமார் 1 ஏக்கர் நிலத்தை விஜி பன்னீர்தாஸின் மகன்கள் விற்பனை செய்துவிட்டதாகவும், எஞ்சியுள்ள நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் வினோத் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் நவம்பர் 11ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விஜி பன்னீர்தாஸின் மகன்கள் ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ் ஆகிய மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது கர்நாடக காவல்துறை. இதில் முதல் குற்றவாளியாக பாபுதாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக காவல்துறையில் பதிவாகியுள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.