அமெரிக்கா மீண்டும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை!!

தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது எனவும் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆகியோரைத் தொடர்புகொண்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார்.

மேலும், ஆப்கான் இராணுவ வீரர்கள் பத்து பேரை தலிபான்கள் விடுதலை செய்தனர். இதற்குப் பதிலாக 3 தீவிரவாதிகளை ஆப்கான் அரசு விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து தலிபான்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு ட்ரம்ப் தயாராகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில் சர்வதேச அளவில் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கான் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், ஆப்கானில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.