பிரபாகரம் -சுற்றுச்சூழல்ப் பாதுகாப்பும் ஈழமும்!!

இன்று உலகம் முழுமையாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. இளையவர்கள் தங்கள் எதிர்காலத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, வீதிக்கு வந்திருக்கின்றார்கள்.
அசமந்தப் போக்கில் உள்ள அரசியலாளர்களும் சரி, ஆட்சியாளர்களும் சரி, எதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு, சிறிது சிறிதாக தள்ளப்படும் சூழல் அதிகரித்து வருகிறது. இயற்கையுடம் மோதிய மதியற்ற மனிதர்களால், இன்று இயற்கையின் சீற்றம் நாளும் அதிகரிக்கும் அபாயம், எங்கும் சூழ்ந்து நிற்கிறது. அது பலவடிவங்களில், பல்வேறு அழிவுகளுக்கான காரணியாக தோற்றம் கண்டு மிரட்டுகிறது. இயற்கையின் அதிகரிக்கும் சீற்றத்திற்கு, வினை விதைத்த மனிதனால் பரிகாரம் காண முயலவில்லை என்றால், அதன் வினையை அவன் அறுத்தே ஆகவேண்டும். நிச்சயம் விதைத்தவன் அதை முழுமையாக அனுபவிக்கமாட்டான், அவன் சந்ததியே அதற்கான விலையைக் கொடுக்கும். என் வாழ்வை சீரழிக்க நீ யார்? கேட்கிறார்கள் இளைவர்கள்... அவர்களுக்காவது தட்டிக்கேட்க்க வேண்டும் என்று தோன்றியதே என்ற பெருமகிழ்ச்சி எனக்கு...

பிரபாகரம் ஒரு பெரும் விருட்சம்.. அது குறித்து எழுதுவதாக நான் அளித்த உறுதிமொழி இன்றும் கிடப்பில் இருப்பதால், அதற்கு வடிவம் கொடுக்கும் முயற்சியே இது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில், முதன்மை விடயங்களில் ஒன்றுதான் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று உலகில் பெரும் அழிவு சக்தியாக மாற்றம் கண்டு நிற்கும் பொலித்தீன் பைகள். ஒரு வருடத்தில் 13 பில்லியன் பொலித்தின் பைகள் பாவனைக்கு வந்து, வெறும் 20 நிமிடங்களில் வீசியெறியப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் ஒரு மில்லியன் பைகள் பாவனைக்கு வருகின்றன. இவ்வாறு 20 நிமிடப் பாவனையில் தூக்கியெறியப்படும் பொலித்தீன் பைகள், உக்கி காணாமல் போவதற்கு 1000 வருடங்கள் ஆகலாம். இடைப்பட்ட காலத்தில் சூழல் மாசுபடுவதற்கான பெரும் காரணியாக வேறு உள்ளன. 60 மில்லியன் தொன் பொலித்தீன் வருடமொன்றிற்கு உற்பத்தியாகிறது என்றால்ப் பாருங்களேன்.

ஸ்டென் கஸ்டஃப் துலின், ஸ்வீடனில் 1959ஆம் ஆண்டு பொலித்தீன் பையை கண்டுபிடித்தார்.  பொலித்தீன் பைகளைக் கண்டுபிடித்த துலினின் குடும்பம், நல்ல விடயமாக கண்டுபிடி;க்கப்பட்ட பைகள் இன்று, தவறான பாவனையால் ஆபத்தானதாக மாறியிருப்பது, துலினுக்கு அதிக சோகத்தை கொடுத்திருக்கும் என வருத்தம் தெரிவிக்கின்றனர். தவறு எனக்கண்டதை, விரைந்து தடுத்து, அதன் தாக்கத்தை மேலும் அதிகரிக்காது தடுக்க வேண்டும். பொலித்தீன் பைகளுக்கான தடைகளை, சிறிது சிறிதாக முன்னெடுத்தாலும், அது சார்ந்த தொழில்துறையினர் தம் பணபலம் கொண்டு அதனைத் தடுத்தும் வருகின்றனர். ஆனால் தமிழர் தேசம், இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதற்கான நிரந்தரத் தடையை விதித்து, அதைக் கடுமையாக அமுல் செய்தது மட்டுமன்றி, அதைக்கடந்தான அதற்கு மாற்றீடான வழிவகைகளிலும், பயணிக்க முயற்சித்தது தான் பெருமை தரும் வரலாறு. காலத்திற்கு தேவையான மக்கள் நலன்கருதிய விடயங்களை, அதி கவனத்தில் கொள்வதுவும், அது குறித்து காத்திரமான ஆட்சி முன்னெடுப்புக்ளை செய்வதுமே, ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் மகிமை. இன்று 20 ஆண்டுகளின் பின்னரும் விடையின்றித் தவிக்கும் உலகின் முன், அன்றே தீர்க்க தரிசனமான திடத்துடன் பயணித்து, தமிழனாக தலைநிமிர வைத்த பிரபாகரம் ஒரு எழுச்சியின் வடிவம் தான்.

கனடாவில் சமிபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், அதிகம் பேசப்பட்ட ஒரு விடயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு. அதற்கு தமது ஒரு திட்டமாக லிபரல்க் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ஜஸ்ரின் ரூடோ, 10 வருடங்களில் 2 பில்லியன் மரங்களை கனடா முழுமையாக நட்டு வளர்ப்பதினூடாக அதற்கு வலுச்சேர்க்கப் போவதாக அறிவித்தார். மரம்வளர்க்கும் பெரும் திட்டம் ஒன்றை ஆபிரிக்க நாடுகள் கூட்டாக முன்னெடுக்கின்றன. அதேபோன்று தான் அமேசன் மழைக்காடுகளை தீமூட்டி அழிக்கும் முயற்சிக்கு, உலகமே திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து, அதனைக் காப்பதற்கும் முனைந்து நிற்கின்றன. ஆம் மரங்களின் வகிபாகத்தின் முதன்மை இன்றைய உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக சொல்லித் தான் வருகின்றனர். ஆனால் ஈழதேசத்தின் வன்னியின் பெருநிலப்பரப்பெங்கும், மரம் வளர்த்தலை ஊக்குவித்தது மட்டுமன்றி, தமிழர் தேசமாகவும், அது சார்ந்த துறைகளைத் தோற்றுவித்து, அதனை முறைமையாக முன்னெடுத்தது மட்டுமன்றி, அதன் பாதுகாப்பிற்கெனவும் முறைமைகளை உருவாக்கி, அவற்றை மீறுவோருக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளையும் கடைபிடித்த தமிழர் தேசம்,
இன்று திரும்பிப் பார்க்கையில் பெருமை சேர்கிறது தமிழா...

ஆனால் 2009 இற்குப் பின்னர், சிங்களத்தால் முதலில் வெட்டிக் காசாக்கப்பட்ட அந்த அவலத்தை, என்னினம் இன்றும் வேடிக்கை தானே பார்க்கிறது? வரண்ட பிரதேசத்தின் நீண்டகால இருப்பிற்கான, வளமாக அது முன்னெடுக்கப்பட்டது. அது சிதைக்கப்பட்டால் அழிவு யாருககு? இது குறித்த சிந்தனையோ, அல்லது முன்னேடுப்போ அன்றி, இருக்கும் இன்றைய தலைமைகளுக்கு பிரபாகரம் பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது என்பதே உண்மை. சரி இலங்கையிலும் ஏதோ சனாதிபதித் தேர்தலாம்! சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி அதில் ஏதும் பேசப்படுமா? ஆட்களுக்கோ பாதுகாப்பிருக்குமா? என்று தெரியவில்லை, பிறகு சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பு இருந்தா என்ன? இல்லை என்றால் என்ன என்கிறீர்களா?

சமீபத்திய ஜ.நா அறிக்கை, காலநிலை மாற்றத்தால் தொடர்ந்தும் அதிகரித்துவரும், கடல் நீர்மட்டத்தின் உயர்வால் ஏற்ப்படக்கூடிய பேராபத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளது. கடலுக்குள் மூழ்கும் மக்கள் பகுதிகள், அதனால் ஏற்ப்படக்கூடிய மக்கள் இடப்பெயர்வுகள் எனப் பலவற்றை அது கோடிட்டுக் காட்டுகிறது. அதன் பாதிப்பில் அதிகம் ஆபத்தை எதிர்கொள்ளும் பகுதிகள் ஆசியாவிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளன. அது குறித்து இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம். இலங்கதைத் தீவில் அதனால் அதிகம் பாதிப்பை எதிர்கொள்ளும் மாவட்டங்களாக, யாழ்ப்பாணம், புத்தளம், அம்பாந்தோட்டை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிலும் யாழ்ப்பாணமே அதிக ஆபத்தை எதிர்கொள்கிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்ப்பட்டதாகக் கருதப்படும், ஜஸ் ஏஜ் - பனி உருக்கப் காலத்தினால், உயர்ந்த கடல் மட்டத்தினால் குமரிக்கண்டம் கடலினுள் ஆழந்து போக, அகண்ட நிலப்பரப்பாக இருந்த பகுதி, நீருக்குள் மூழ்க, மன்னார் வளைகுடாவரை உயர்ந்த நிர்ப்பரப்பு, எம்மைத் தீவாகக் கூடப் பிரித்துவிட்டது. ஆகவே மேலும் நீர் உயரும் போது, அதை அண்டிய இப்பகுதிகள் தொடர்ந்தும் நீருக்குள் அமுழும் என்பதை இலகுவாகப் புரியலாம்.

யாழ் குடாநாடு, முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த 1993இல், யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழர் தாயகத்தின் அனைத்துத் துறைசார் திட்டமிடலை மையப்படுத்தி, ஒரு ஆராச்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதில் அடையாளம் காணப்பட்ட, பல துறைகள் சார்ந்த திட்டமிடல் விடயங்கள், விரிவாக்கம் கண்டு அதன் தொடர்ச்சியாக, தமிழீழ உட்கட்டுமானம் என்ற பூர்வாங்க வரைவு வடிவம் பெற்றது. இது குறித்தும் பின்னர் விரிவாகப் பார்ப்போம். அதன் தொடர்சியாக, சமாதான காலகட்டத்தில் சர்வதேச வல்லுனர்கள் துணைகொண்டு, அவை மேலும் வளப்படுத்தப்பட்டு, வலுப்படுத்தப்பட்டன. அவற்றில் பல வழிகளிலும் தொண்டாற்றிய, பல துறைசார் வல்லுனர்கள் இன்று உலகளாவிப் பரந்து சாட்சியாக வாழ்கின்றீர்கள். அதில் தமிழ்த்தலைமையால் வலியுறுத்தப்பட்டு, கவனத்தில் கொள்ளப்பட்ட விடயம். அதிகரித்துவரும் நீர்மட்டத்தால் எதிர்காலத்தில், தமிழர் தாயகம் எதிர்கொள்ளவுள்ள சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், எவ்வாறான எமது நிலத்திற்கேற்ற திட்டமிடலை முன்னெடுப்பது, என்பற்கான ஆய்வும் அது குறித்த விரிவான திட்ட வரைவும். இன்று 15 ஆணடுகளின் பின்னரும், சர்வதேசத்தில் வெறும் பேசுபொருளாக மட்டும் உள்ள இவ்விடயத்தை, அன்றே செயற்பாட்டு வடிவமாக உருப்பெற வலியுறுத்திய பிரபாகரம், ஒரு எழுச்சியின் வடிவம் மட்டுமல்ல, அது ஒரு பல்பரிமாண அதிசய சக்தி.

அதைப் புரிதலுக்கு உட்படுத்துவதும், அவ்வாறான இனநலன் கருதிய தீர்க்க தரிசனமான முன்னெடுப்புகளை சிந்திப்பதுவும், அதற்காக முனைவதுமே, அதன் வடிவமே அன்றி வெறும் சொல்லாடல்களும், சொதப்பல்களும் அல்ல. சுற்றுச் சூழல்ப்பாதுகாப்பிலேயே தன் இனத்தின் நலனை முன்னிறுத்திய பிரபாகரம் எங்கே? இதில் கடந்த 10 வருடங்களில் எந்தவொரு துரும்பையும் நகர்த்தாக அல்லது எவ்வித சிந்தனையுமே அற்ற இன்றைய தமிழ்த் தலைமைகள் எங்கே? அல்லது இன்றும் காத்திரமான முன்னெடுப்புகள் இன்றி தொடர்ந்தும் பேசுபொருளாக மட்டும் சுற்றுச் சூழலை பயணிக்க அனுமதிக்கும் உலகத் தலைமைகள் தான் எங்கே?

பிரபாகரம் என்ற எழுச்சிவடிவத்தை, வெறும் இராணுவ மயப்பட்ட வடிவமாகப் பார்ப்பது மட்டுமன்றி, அவ்வாறே இவ்வுலகிற்குக் காட்டி, அதுவே தமிழ்த் தேசியம் என முழங்கும் வெறும் உணர்ச்சிப் பிழம்புகளே! அதுவல்ல பிரபாகரம் காட்டிய உயரிய தமிழத் தேசியம். அனைத்துத்துறைகளிலும், வடிவங்களிலும், உலகில் தனித்துவமாகப் பெருமை கொள்ளும் வகையில், உயர்ந்து நிற்ப்பதுவே பிரபாகரம் காட்டிய தமிழ்த்தேசியம். இதை நாம் வாழும் தேசமெல்லாம் கூட சாதித்து, உயர்ந்து நிற்கலாம். இவற்றை இனமாக நாம் அமுல்ப்படுத்தி, அனைவருக்கும் முன்மாதிரியான இனமாக மாறி, அதனூடாக அதனைச் சாதிக்கலாம். முடியுமா எங்களால்? பிரபாகரம் தொடர்ந்தும் வரும்...

இயற்கை எனது நண்பன்,
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,
வரலாறு எனது வழிகாட்டி.

எழுத்துருவாக்கம்- நேரு குணரத்னம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.