கண்ணீரின் நாட்கள்.!!

அலைக்கழிக்கப்படும் தெருக்களெங்கும்
கண்ணீரின் ஓலங்கள்


மந்தைகளாக்கியும் பொம்மைகளாக்கியும் தலைப்புச் செய்திகளின் கார்டூன்களாக்கியும்
காலத்தை நிரப்புகின்றன
நாகரீக அரசியல் யந்துகள்

வானதாகம் போல்
பெருக்கெடுத்த கண்ணீரிலும் நாட்களுக்கு அர்த்தம் கிடைக்கவில்லை

ஒரு நாளில் கரங்களில் ஒப்படைத்த பிள்ளை
பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளை
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளை
வருமா என்ற ஏக்கம் நாட்களை உருட்ட
ஆயிரத்தைக் கடக்கிறது நாட்பறவை

உயிரை எரித்து
உணர்வை உருக்கி வீதிகள் முழுதும்
கண்ணீரை இறைக்கும் ஈழ மாதாவின் மாண்புகள் செத்திடாது சத்தியத்துள்

இனி தாகம் நிறையும் மண்ணில்
ஈகம் வெல்லட்டும் என
கண்ணீரின் நிறம் சிவப்பதை உணர்கிறது உள் மனம்

அன்று மனித உரிமை பற்றிப் பேசுவோர்
மௌனிகளாக மண்டியிடுவர்
ஈழக் கண்ணகி கண்ணீரின் காட்டாற்று வெள்ளத்தில்

த.செல்வா
11.12.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.