பேராபத்தை எதிர்நோக்கவுள்ள வடக்கு நிலம்!

வடக்கில் கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் வடக்கின் சுற்றுச் சூழலுக்கு பேராபத்து நிகழவுள்ளது என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.


அத்துடன், மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதாலேயே வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகத்தில் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட அனுமதியைப் புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதால் வடக்கில் மணற்கொள்ளை பெரும் வேகம் எடுத்துள்ளது.

இவ்வாறு கட்டுப்பாடற்ற முறையில் மணல் வளம் சுரண்டப்படுவதால் விரைவில் மணல் வளத்துக்குப் பற்றாக்குறைவு ஏற்படவுள்ளதோடு வடக்கின் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து நிகழவுள்ளது.

மணல்வளம் கட்டுமானத்துக்கும் அபிவிருத்திக்குமான வளம் மாத்திரமல்லாது கரையோர மணற்குன்றுகள் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் அரண்களாகப் பயன்படுவதோடு நிலத்தடி நீர் மட்டத்தின் அளவிலும் பாரிய செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.

நிலத்தின் அடியில் கடல் நீரில் மிதந்து கொண்டிருக்கும் நன்னீர் வில்லையின் தடிப்பை மணற்குன்றுகளின் உயரமே தீர்மானிக்கின்றது.

மணற்குன்றுகளின் உயரம் குறையக்குறைய நிலத்தின் கீழே நன்னீர் வில்லையின் தடிப்புக் குறைந்து அவ்விடத்தைக் கடல்நீர் ஆக்கிரமிக்கும். மண்கும்பான் என்ற நன்னீர் கிராமம் இன்று குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியிருப்பதன் பின்னணியும் இதுதான்.

இதற்கு முன்னரும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றிருந்தாலும், அதனை ஏற்றிச் செல்வதற்கான வழித்தட அனுமதி மணற்கொள்ளையை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

தற்போது வழித்தட அனுமதி தேவையற்றதாக்கப்பட்டு பொலிஸாரின் சோதனைக் கெடுபிடிகள் இல்லை என்றதும் சட்டவிரோத மணல் அகழ்வு விஸ்வரூபம் பெற்றுள்ளது.

அபிவிருத்தியில் ஏற்படும் தாமதங்களையோ அல்லது வேறு காரணங்களையோ அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வழித்தட அனுமதியைத் தேவையற்றதாக்கும் முடிவை எடுத்திருக்கலாம். இம்முடிவு தென்னிலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாகவும் இருக்கலாம்.

ஆனால், நிலத்தடி நீரை உயிர் ஆதாரமாகக்கொண்ட வடக்கின் சுற்றுச் சூழலுக்கும், வடக்கின் நிலைத்த அபிவிருத்திற்கும் இம்முடிவு எவ்வகையிலும் பொருத்தம் அற்றதாகும்.

இதனைக் கருத்திற்கொண்டு, நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வழித்தட அனுமதி நீக்கத்தினால் வடக்குக்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை அரசுக்கு எடுத்துச் சொல்லி மீளவும் அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு உடனடியாக ஆவன செய்யவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.