மட்டக்களப்பின் தொன்மைமிகு கிராமத்தில் முதலாவதாக பல்கலைக்கு தெரிவாகி வரலாறு படைத்த மாணவி!

மட்டக்களப்பில் செங்கலடி பிரதேசத்தில் காணப்படும் கிராமமே கரடியனாறு, அங்கு மட்டக்களப்பின் தொன்மை வரலாறுகள் புதைந்து காணப்படும் குசனார் மலை முருகன் ஆலயம் காணப்படுகின்றது.



இவ் ஆலயத்தினை மையமாக கொண்டு ஆட்சி செய்த இராசதானியின் வழிவந்த பழங்குடி கிராமமான கரடியின்குளம் எனும் குக் கிராமத்தினை சேர்ந்த மாணவி சாந்தலிங்கம் டிலுக்சி கலைத்துறையில் மாவட்ட மட்டத்தில் 5 ஆம் இடம் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

கரடியன்குளத்தில் பல நூறு வருடங்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர், அவர்கள் மீன்பிடி, விவசாயம் போன்ற தொழில்களையே செய்து வந்தனர் அவர்களது பரம்பரையில் இது வரை எவருமே உயர்தரம் படித்து பல்கலைக் கழகம் செல்லவில்லை. இப் பல நூற்றாண்டு குறையினை நிவர்த்தி செய்துள்ளார் டிலுக்சி.

மட்/ கரடியனாறு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றிய மாணவி டிலுக்சி தனது கிராமத்தினை ஏனைய சமூகத்துடன் கல்வியில் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும் எனும் நோக்குடன் தனது அயராத முயற்சியால் 3A சித்தி பெற்று மாவட்டத்தில் 5 ஆம் இடத்தினை தனதாக்கி பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பின்தங்கிய ஒரு குக் கிராமமான கரடியன்குளத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவியின் சாதனையால் அச் சமூகம் அடுத்த கட்டத்தினை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உயர்தர பெறுபேற்றில் இம் மாணவியின் வகிபங்கும் அளப்பரியதாகும்,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.