காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகள் சீராக இல்லை -மருந்து சுற்றும் பைகளுக்கு மேல் குட்டைநாய்-!!

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதில் வைத்தியசாலை நிர்வாகம் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்துவரும் நிலையில், நோயாளர்களுக்கு மருந்து சுற்றிக்கொடுக்கும் காகிதாதிகளுக்கு மேல் குட்டைநாய் ஒன்று படுத்திருந்த விடயம் நேற்று புதன்கிழமை (04) பெரும் பூதாகரமானது.



இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, இதைக் கண்டுபிடித்த தரப்பினருக்கும் பாதுகாக்கத் தவறிய தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் இடம்பெற்றமையை அவதானிக்க முடிந்தது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார நடைமுறைகள் தொடக்கம் நோயாளர்களுக்கான பொது ஒழுங்கு வரை பல்வேறு குறைபாடுகள் நிலவி வருகின்றன. இவை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தரப்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அவற்றை நிவர்த்திசெய்ய இதுவரை வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் பயன்படுத்தும் மலசலகூடங்கள் சுகாதார முறையில் சுத்தம் செய்யப்படுவதில்லை. சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திராகவங்கள் போத்தல்களுடன் அடிக்கடி காணாமற்போகின்றன எனத் தெரியவருகின்றது.

மேலும், சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்படவேண்டிய பொருட்கள் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளன. நோயாளர்களுக்கு மருந்துகள் சுற்றிக்கொடுக்கும் காகிதாதிகள் அடங்கிய பொதி உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை. பாதுகாப்பற்ற அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்தக் காகிதாதிகளுக்கு மேல் நாய்கள் படுத்துறங்கும் நிலை காணப்படுகின்றது.

நேற்றும் (04) இவ்வாறு குட்டைநாய் படுத்திருந்தமை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் குழப்பம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு மருந்து சுற்றிக்கொடுக்கும் காதிதாதிகளுக்கு மேல் இவ்வாறு நாய் படுத்திருப்பது பெரும் சுகாதாரக் குறைபாடு என்பதை சிலர் சுட்டிக்காட்டியதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, இங்கு சிகிச்சைக்காகக் செல்லும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது நோயாளர் காவு வண்டிக்கு சாரதி இல்லை என வைத்தியசாலைத் தரப்பினால் தங்களுக்கு கூறப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மன்னாரைச் சேர்ந்த ஒருவர் இந்த வைத்தியசாலையில் சாரதியாக நியமிக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சாரதி இல்லை என வைத்தியசாலைத் தரப்பினர் கூறுவது ஏன் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்திசெய்ய யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-பி.பொன்ராசா-
05.12.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.