புதிய சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கலில் முறைகேடு!


மோட்டார் வாகன திணைக்களம் அறிமுகம் செய்த புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

புதிய சாரதி பத்திரம் அறிமுகப்படுத்தும் போது இலத்திரனியல் சிப் அதில் உள்ளடக்கப்பட்டாலும் அதன் ஊடாக பிரயோசனப்படுத்தக்கூடிய பாகங்கள் எவையும் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனுடன் 300 ரூபாயிற்கு பெறக்கூடிய அனுமதிப் பத்திரத்திற்கு ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ள நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடுவதற்காக கணனி அமைப்பு ஒன்றையும் தொடர்பாடல் அமைப்பு ஒன்றையும் உருவாக்குதல், ஒப்பந்த காலப்பகுதியினுள் அமுல்படுத்தல் மற்றும் அந்த அமைப்பை மோட்டார் வாகனத் திணைக்களத்திற்கு கையகப்படுத்தல் ஆகிய விடயங்களுக்கு அமைய தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த நிறுவனம் ஒப்பந்த காலப்பகுதியினுள் ஒப்பந்தத்திற்கு அமைய செயற்பாடாமை காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.