ஆரோக்கிய விதிமுறைகள் - Dr. சி.சிவன்சுதன்!!

நாம் சுகதேகி எனக் கருதிக் கொள்ளும் ஒவ்வொருவரும் சில அடிப்படை ஆரோக்கிய விதிகளை கடைப்பிடித்து வரு வார்களாக இருந்தால் அவர்கள் தொடர்ந்தும் ஆரோக்கியமாக வரமுடியும். அந்த அடிப்படை ஆரோக்கிய வழி முறைகளாவன,


எங்கள் குருதி அமுக்கத்தை அளந்து பார்த்துக் கொள்ள வேண்டும். அது 130/80 என்ற மட்டத்திற்கு மேற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம்.

எங்கள் குருதி குளுக்கோசின் அளவை பரிசோதித்துப்பார்த்துக் கொள்வோம். எட்டுமணி நேரம் உணவு, தேநீர் உட்கொள்ளாது சோதித்துப் பார்க்கப்படும். குருதி குளுக்கோசின் அளவு 110 mg/dl இற்கு மேற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வோம்.


பால், முட்டை என்பன ஆபத்தான உணவுகளல்ல. ஆரோக்கியமான நிறை உணவுகள் என்பதை மனதில் நிறுத்துவோம்.
எங்கள் உடல் நிறையை அளந்து பார்த்துக் கொள்வோம். எங்களுக்கு இருக்க வேண்டிய ஆரோக்கியமான நிறை எவ்வளவு என்பதை அறிந்து வைத்திருப்போம். அது எமது உயரத்தில் தங்கி இருக்கிறது.


தினமும் எங்களுடைய நாளாந்த வேலைகளுக்கு மேலதிகமாக 30 நிமிட நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்கிக் கொள்வோம்.
மூன்று வேளை உணவுடனும் ஏதாவது இலைவகை மரக்கறிகளை சேர்த்துக் கொள்வோம். பழங்களை உணவு உண்பதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாக உண்ணுவோம். இது நாங்கள் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக அமையும்.

தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை மகிழ்வாகவும் ஓய்வாகவும் இருப்பதற்கு ஒதுக்கிக் கொள்வோம். மனதிற்கு மகிழ்வான விடயங்களை பேசுவதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வோம். மன்னிக்க பழகுவோம்.

இயற்கையான உணவுகளை சமைத்து உண்பதில் அக்கறை செலுத்துவோம். செயற்கையான சத்துமா, குளிசைகள், ரொனிக் வகைகள் போன்றவற்றில்தான் உண்மையான சத்து இருக்கிறது என்ற மாயையிலிருந்து விடுபடுவோம். போதுமான அளவு தூயநீர் அருந்துவோம்.

வீட்டுச்சுற்றாடல் சுத்த மாகவும், காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வோம். உறங்கும் பொழுது தூய காற்று உள்நுழைவதற்காக யன்னல்களை திறந்துவைத்து உறங்குவோம்.

வீட்டிலே குளிர்ச்சியான மரங்களை நாட்டி வளர்ப்போம். இவை எமக்கு ஒட்சிசனையும், ஈரலிப்பையும் குளிர்ச்சியையும் வளங்கும்.
எமது உடலில் ஏதாவது அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலையில் காட்டி ஆலோசனை பெறுவோம்.

ஆரோக்கிய உணவு முறை என்பதன் அர்த்தத்தை புரிந்து அதனை நடைமுறைப் படுத்த முயலுவோம். உணவுக்கோப்பையின் அரைப் பங்கு மரக்கறிவகைகளாகவும், கால்பங்கு மாப்பொருளாகவும் (சோறு, இடியப்பம், பிட்டு) கால்பங்கு புரதமாகவும் (முட்டை, பருப்பு, மீன், இறைச்சி,கௌபி, பயறு, றால்) இருப்பதை உறுதி செய்து கொள்வோம்.

இரசாயனம் சேர்க்காத மருந்து அடிக்காத இயற்கையான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். உதாரணம் – முருங்கை இலை, மீன், முட்டை. பால், வாழைப்பூ,வாழைக்காய், முருங்கைக்காய், இயற்கையான கீரைவகைகள், கொய்யா,விளாம்பழம், தேசிக்காய், மரவள்ளி, வற்றாளை,பயறு, கௌபி, கச்சான், கடலை, தயிர், மோர்,போன்றவை ஆகும்.

சரியான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டும் மக்களிடையே பரப்புவோம்.

புகைத்தல், குடிவகை பாவித்தல், போதைப்பொருள் பாவனை என்பவற்றை முற்றாக தவிர்ப்போம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.