திவ்யாவின் தற்கொலை - சிறுகதை!!

அந்த நியாய விலைக்கடையில் ஒருவர் விடும் மூச்சுக்காற்று ஒருவர் மீதும் தோள்களும் தோள்களும் உரசிக் கொண்டும் ஒருவருக்கொருவர் நெருக்கிக் கொண்டும் இனி கடுகளவும் இடைவெளி இல்லை என்பதாகப் பெருங்கூட்டம் ஒன்று முட்டி மோதிக் கொண்டு நின்றிருந்தது.
சுற்று வட்டாரத்தில் திருவிழாவிற்குப்பின் கூடும் பெருங்கூட்டம் இதுவாகத்தானிருக்கும். 10 மணிக்குத் திறக்கப்படும் கடைக்கு 5 மணிக்கெல்லாம் வரிசைக்கு ஆட்கள் வந்துவிடுவதும், ஆட்கள் வந்ததற்கு அடையாளமாய்க் கற்களை வைத்துவிட்டு பக்கத்துக் கடைகளுக்குச் சென்று தேநீர் குடிக்கும் விநோதங்களும் இங்கேதான் நடக்கும்.

எப்படித்தான் பெரியவர்கள் தவம்கிடந்தாலும் பொருள் வாங்கும் நேரத்தில் குறைந்தபட்சம் 10 பேராவது ஏதாவதொரு காரணம் சொல்லி வரிசையை ஓரங்கட்டி முன்னுரிமை பெற்று பொருள் வாங்குவதும் நடந்து கொண்டுதான் இருக்கும்.

அப்படித்தான் அந்த விடியலிலும் 1 கிலோ 1 ரூபாய் அரிசி வாங்க ஓட்டைச் சாக்குடன் லட்சுமியும் அந்தக் கூட்டத்தில் நின்றிருந்தாள். ஓட்டையில் ஒரு காகிதத்தை அடைத்துக் கொண்டு தலையில் தானாகச் சுமையேற்றி ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டுக்கதவு சற்றுத் ஒருக்களித்து திறந்தவாறிருந்தது. லட்சுமியின் மகள் திவ்யா அந்த ஊரிலேயே பல்கலைக்கழகத்தில் போய்ப் படித்துக்கொண்டு இருப்பவள். கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் அவளே முதலிடம். திவ்யாவை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளும் லட்சுமி, அதனைப் பார்க்கத் தன் கணவனுக்குக் கொடுத்து வைக்கவில்லையே என அடிக்கடி புலம்புவாள்.

திறந்த கதவைப் பார்த்து எதாவது தன்மகள் படித்துக் கொண்டிருப்பாள் என்று தலைசாய்த்து அரிசி மூட்டையை ஒரு பக்கமாக வாசலிலேயே இறக்கி வைத்துவிட்டுப் பார்த்தாள். வீடு முழுவதும் ஒரே இருளாக இருந்தது.

“திவ்யா… திவ்யா”

“ஏய் திவ்யா… திவ்யா” என்று அழைத்துக் கொண்டே மின்விளக்கைப் போட்ட லட்சுமி தன் கண்கள் காண்பது கனவா நனவா என தன் சுயநினைவை இழந்து ஒரு ஓரமாகச் சரிந்து வீழ்ந்தாள்.

லட்சுமியின் தலைக்கு மேலே திவ்யாவின் கால்கள் ஊசலாடிக் கொண்டிருந்தது. மின்விசிறியில் லட்சுமியின் பழைய சேலையைச் சுருக்கிட்டு கழுத்தைத் திணித்து கொழகொழத்துப் போயிருந்தாள் திவ்யா.



லட்சுமி நினைவு திரும்பி மண்டையிலடித்து ஓங்கி அலறவும் அக்கம் பக்கத்தார் வந்து திவ்யாவின் உடலைக் கீழிறக்கினார்கள். அதற்கு முன்னதாகவே அவள் உயிர் பிரிந்திருந்தது. ஊரார் ஆளுக்கு ஒன்றாகப் பேசத் தொடங்கியிருந்தனர்.

“என்ன ஆச்சு லட்சுமி?” என யார் கேட்கும் கேள்வியும் லட்சுமியின் காதில் விழவில்லை. தன் பிள்ளை இழந்த பித்து கொஞ்சம் கொஞ்சமாய் லட்சுமியின் சித்தத்தை ஆளத் தொடங்கியிருந்தது.

ஆனால் லட்சுமி நியாயவிலைக் கடைக்குச் சென்று ஒரு அரைமணி நேரத்தில் வீட்டில் திவ்யா படித்துக் கொண்டிருந்தபோது, அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னுடன் படிக்கும் கண்ணனிடமிருந்து தான் அந்த அழைப்பு. அவனுக்கு அவளைப் பிடிக்குமென அவனுக்கும் தெரியும். அவளுக்கு அவனைப் பிடிக்குமென அவனுக்கும் தெரியும். ஆனால் வார்த்தைகளால் அதனை இருவருமே சொல்லிக் கொண்டதே இல்லை. ஆனாலும் 5 வருடங்களாக ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்களாக மட்டுமே தொடர்கிறார்கள். எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து பேசிவிடுவார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஈர்ப்பை மீறிய மற்றொன்றை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

எப்பொழுதும் கண்ணனுக்கு இவளது குறிப்பேடுதான் பிடிக்கும். தான் வாங்கிப் படித்துவிட்டுத் தருவதாக வாங்கிப் போனவன் இரண்டு நாட்களுக்குப் பின்தான் கொண்டுவந்து கொடுத்தான். குறிப்பேடை அவனிடமிருந்து பெற்றதும் புன்னகையோடு பக்கம் பக்கமாய் அவளுக்குத் தேவையான ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தது, திவ்யாவின் கண்கள்.

கண்டுபிடித்த அவளது கண்கள் இப்பொழுது மலர்ந்தது. ‘புரியாத பிரியம் பிரியும்போது புரியும்’ என எழுதி அதனருகில் சிறிதாய் ஒரு ரோஜாவும் வரைந்திருந்தது. அதைப் பார்த்த உடனே அவளுக்குள் ஒரு சிறு ஆனந்தம் துளிர்த்தது. இருந்தும் இருவரும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளவே இல்லை. அடுத்த நாள் வகுப்பின் கரும்பலகையில் திவ்யா வரும் முன்னதாகவே அதே வாசகம் எழுதப்பட்டு அதே போன்று ஒரு ரோஜாவும் வரையப்பட்டிருந்தது. திவ்யாவுக்குள் புரியாத பிரியம் ஏற்கனவே முகிழ்க்கத் தொடங்கியிருந்தது.

அங்குமிங்குமாய் கண்கள் அலையும் போதெல்லாம் அவன் கண்கள் கண்டபிறகு தான் புத்தகத்திற்கு மீளும் என்ற நிலை அவறை அறியாமலே உருவாகியிருந்தது. அதனாலோ என்னவோ கண்ணன் தொலைபேசியில் பேசியதும் இருக்குமிடம் மறந்து எவ்வளவு நேரம் பேசினாள் என்பதனை அவள் அறிந்திருக்கவில்லை. அந்தக் கண நேர ஆனந்தம் அவளது வாழ்க்கையே அழித்து விடுமெனவும் அவள் நினைக்கவில்லை.

அவள் கண்ணனிடம் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கதவருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தான் பிரபு. அவள் சிரித்துப் பேசியதை எப்படிப் புரிந்து கொண்டானோ என்னவோ அவள் பேசி முடித்துத் தொலைபேசியை வைக்கவும், அவள் முன்னே பிரபு இயல்பான புன்னகையோடு வந்து,

“யாருகிட்ட பேசிக்கிட்டு இருந்த?” என்று வினவவும், நிலமையின் தீவிரம் தெரியாமல் விளையாட்டுத் தனமாக அந்தச் சொல் அவளையறியாமல் சிரித்துக் கொண்டே விழுந்தது, வாழ்க்கையை வினையாக்க,

“ஆங்… என்னோட காதலன் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்… என்னவாம்?” அவனிடம் கூட சொல்லாததை அவளையறியாமலே சொல்லிவிட்டு நிராயுதபாணியானாள் அவள். பிரவு தான் அதுவரை பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பானோ என்கிற எண்ணம் சிறிதும் இன்றி இயல்பாகச் சிரித்துக் கொண்டு சொன்னதை உள்ளளர்த்தத்துடன் அவன் எடுத்துக் கொள்வான் என்பதனையும் அவள் உணர்ந்திருக்கவில்லை.

“எங்க உன் செல்போன குடு? யாருகிட்ட பேசின?”

“யாரு - அவன்?”

“இல்லண்ணே அப்படில்லாம் ஒண்ணும் இல்லன்னு…”

சொல்லி முடிக்கும் முன்பே கைபேசியைப் பிடுங்கி “என்ன கண்ணனா? யார் இவன்?”

“அது…. அது வந்து…?”

“என்னோட ஃபிரண்ட்…”

“என்ன? நீ கல்யாணம் பண்ணிக்கப் போற பிரண்டா?” இது கோபத்தின் உச்சத்தில் பிரபு.

“எவ்வளவு தைரியம் உனக்கு. நாங்கள்ளாம் இருக்கும் பொதே தைரியமா எங்கிட்டயே காதலன்னு சொல்லுவ?”

என்றவாறு கோபமாய் அநாவசியமான வார்த்தைகள் பிரபு வாயிலிருந்து உதிரவும், எல்லோரும் கேட்பார்களே என்ன சொல்லப் போகிறோம் பல்வேறு காட்சிகள் நிமிடத்தில் மனதில் தோன்ற தன்னை அறியாமலே கண்களில் நீர் உருண்டு வழிந்து கொண்டே இருந்தது திவ்யாவிற்கு.

முடிந்தளவு வார்த்தைகளால் கேவலப்படுத்திவிட்டு, சிவாவுக்கு தகவலும் சொல்லிவிட்டான். சிவா திவ்யாவின் பெரியப்பாவின் பையன். கணவனை இழந்த கைம்பெண்ணான லட்சுமிக்கு உதவியாக திவ்யாவைப் படிக்க வைத்தது சிவாதான். ஆகவே சிவாவிடம் திவ்யாவிற்கு மிகுந்த மரியாதையும் பயமும் இருந்தது.

பின்னர் கையறுநிலையில் அழுது கொண்டிருந்த திவ்யாவை அடிக்க கருவேலங்கட்டையை உருவிக் கொண்டு வந்தான் பிரபு.

அவன் எவ்வளவுதான் அண்ணன் என்று ஏமாற்றினாலும். அவனுக்கு எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்கிற எண்ணம் உருத்திக் கொண்டே இருந்தது. அதற்குள்ளாகத் தன் கைமீறி அவள் வேறொருவனை விரும்புவதாகச் சொன்னதும் அவனால் அதனைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அவனுக்க அவள் வேண்டும், ஆனால் திருமணம் செய்வதற்கு அல்ல, அவளை அனுபவித்துத் தூக்கி எறிய வேண்டும் என்பதே எண்ணம். இதே போல் சில பெண்களைத் திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதை திவ்யா அறிந்தே வைத்திருந்தாள். இதனை எதைப் பற்றியும் அறியாத சிவாவோ வேறு விதமாக நினைத்துத் திவ்யாவைத் திட்டலானான். பெரும்பாலும் திவ்யாவின் தோழர் தோழிகளை சிவா அறிவான்.

கண்ணனையும் திவ்யாவின் தோழனாகத் தெரியும். ஆயினும் ஒரு பொறுப்பான அண்ணனாகத் தன் தங்கையை வேறு சாதி பையனுக்கு மணம் முடிப்பதையோ காதலிப்பதையோ அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

கண்ணன் மீது நல்ல எண்ணம் இருந்த போதும் அவனுக்குத் தன் தங்கையா என்றால், சாதியே கண்முன் ஓடியது. அதனை நினைத்து நினைத்து திவ்யாவை ஓயாமல் திட்டிக் கொண்டே இருந்தான்.

திவ்யாவின் நிலையோ என்னவென்று சொல்வது, யாருக்கு எவ்வாறு புரிய வைப்பது என்று யானை தன்னை கீழே தள்ளி தன் நெஞ்சிலேறி மிதிப்பதைப் போலானது. தான் விளையாட்டாகத்தான் கூறினோம் என்று பிரபுக்கு எப்படி புரிய வைப்பது. அதோடு பிரபுவின் பிடியிலிருந்து விடுபட்டு எப்படி பிரபுவின் கேவலமான எண்ணத்தையும் சேர்த்து சிவாவுக்கு எப்படி விளக்குவது.

அப்படி மனதைத் தேற்றி பேச ஆரம்பிக்கும் போதோ யாரும் பேச்சைக் கேட்க விரும்பாதவர்களாய், “சீ வெட்கமில்லாம பேசாத.. மூஞ்சியும் ஆளும் பாரு” என்று கடைசிவரை அவளைப் பேசவே விடவில்லை.

தன்னை யாரும் நம்பவில்லையே என்ன செய்வது? கைம்பெண்ணாக தன்னை வளர்த்த அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது? கடவுளே என சுவரில் மோதி மோதி அழ முடிந்ததே தவிர பேச வார்த்தைகளே எழவில்லை திவ்யாவுக்கு.

இத்தனைக்கும் கண்ணன் மீது ஈர்ப்பு இருந்ததை அவனிடம் கூட இன்னும் சொல்லவில்லை. தன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றி அவன் திருமணம் செய்து கொள்ள மாட்டானா? என்று ஒரு நிமிடம் ஆசைகூட வந்து போனது.

இந்தச் சூழ்நிலையில், அவளுடைய கைபேசியிலிருந்து எண்ணை எடுத்து ஆளாளுக்குத் திட்டவும் ஆரம்பித்து விட்டார்கள். அவனுக்கு சிறு ஈடுபாடு இருந்து சிறிதான ஒரு மெல்லிய உணர்வு அவள்மேல் இருந்தது உண்மைதான். அவளிடம் கூட சொல்லாத ஏன் இத்தனை பிரச்சனைகள் என அவன் நினைத்திருக்கக் கூடும்.

திவ்யாவின் நிலையோ பேருந்தில் அடிபட்டு தலை துண்டான புறாவைப் போல ஆனது. துடிக்கவும் அழவுமே அவளால் முடிந்தது. தன்னால் தன் அம்மாவுக்கும் கேவலமே என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்தது.

முடிந்தளவு திட்டிவிட்டு பிரபு திவ்யாவின் கைபேசியை வாங்கிக் கொண்ட அந்த நொடி தற்கொலை எண்ணம் உதிக்கவே தன் முடிவினைத் தேடி மின்விசிறியில் சுருக்கிட்டாள்.

திவ்யாவின் மெல் உணர்வினை கண்ணன் இறுதியாக அறிவதற்கான வாய்ப்பும் அற்றுப் போனது. தன் வாய்தவறிக் கூறிய ஒரு சிறு வார்த்தை வாழ்க்கையிலேயே தடம் புரண்டுவிடும் என்பதற்கு மௌன சாட்சியாகத்தான் திவ்யாவின் உடல் அங்கே கிடத்தப்பட்டிருந்தது, என்பதனை யார் அறிவார்?

திவ்யா காதலித்து கர்ப்பமானதாகவும், தேர்வில் தோல்வியுற்றதாகவும், காதலன் கைவிட்டதாகவும், என்னென்னவோ காரணங்களோ எல்லோராலும் பேசப்பட்டது.

தன்னைப் பிரபுவிடமிருந்து விடுவிக்க முடியாமல், தன் அண்ணனிடம் உண்மையை நிரூபிக்க முடியாமல், எல்லாவற்றுக்கும் மேலாகத் தான் கண்ணன் மீது வைத்த அன்பு ஓர் வார்த்தையாய் வந்த அடுத்த நொடிக்குள் அவனுக்குச் சொல்லாமல் பிரபு என்ற அற்பனிடம் வெளிப்பட்டுவிட்ட நிலையைக் கூட கூறாமல், அசையா மடந்தையாய் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள் திவ்யாவை.

எதைப்பற்றியும் யாருக்கும் உண்மை தெரியவில்லை. ஆனால் நன்றாய் படித்துத் தான் பெருமைப்படும்படி வளர்த்த மகள் இப்படி விட்டுவிட்டு, தன்வாழ்வின் அர்த்தத்தையும் தொலைத்துவிட்டாளே என அழுது கடலைப் பெருக்கியது திவ்யாவின் அம்மா லட்சுமியின் அழுகை மட்டும்தான்.

பி. வித்யா

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.