யார் கண்களும் சாட்சிக்கில்லை!!

ஜனன பீடம்
பலிபீடமாக 
பரிணமாம் அடைகிறது

கருவறையிலேயே 
சிலுவை சுமக்கிறது 
சிசுக்கள் 

காமத்தின் அவசர 
கழிவால்
கருவறையை 
கல்லறையாக்காதீர்கள்...
மொட்டுக்கள் மலர முன்னே
மலர் வளையம் வைக்காதீர்கள்....

முளை விடும் காமத்தால்
விதை தூவி விட்டு 
தலையெடுக்கும் முன்னே
தலை கொய்து விடுகிறீர்களே..?

ஓர் அறைக்குள்
ஒரு தாலாட்டுப் பாடலையும்
விளையாட்டு காட்டி 
மகிழ்விக்கும் வித்தைகளையும் 
பயிற்சி எடுத்து
அரங்கேற்றங்காணாது 
பரிதவிப்போர் பலருண்டு...

கருவறைக்குள் இருள் நிரம்பியிருப்பது
யார் கண்களும் சாட்சிக்கில்லையென
என நம்பவைத்து
கொலைக்கான உக்கிரத்தை
அவ்வளவு சூட்சுமமாக
முடித்துக்கொள்கிறார்கள்...

இந்த 
மண்ணின் வரங்கள்
சாபங்களாக கலைந்து போகின்றன...

-சங்கரி சிவகணேசன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.