அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் ஜனாதிபதியிடம் சவால் விடுக்கும் ஹிருணிகா!!

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வர முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சவால் விடுத்துள்ளார்.


அத்தோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நெருங்கிய நண்பர்கள். ஆகவே இரு தரப்பு திருடர்களும் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆட்சிக்கு வந்தவுடன் பிணைமுறி மோசடி குற்றவாளிகளை ஒரு மாத காலத்திற்குள் தண்டிப்பதாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டவர்கள் இன்று பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் அறிக்கையினை கண்டு அஞ்சுகின்றார்கள்.

அதாவது 2001ஆம் ஆண்டில் இருந்து முறிகள் விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிணைமுறி கொடுக்கல் வாங்கள் மோசடியாளர்கள் இரு தரப்பிலும் உள்ளார்கள். ஆகவே இரு தரப்பினரும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல. தற்போது திருடர்கள் இரு தரப்பிலும் அஞ்சுவது காணக்கூடியதாக உள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் இன்றும் நெருங்கிய நண்பர்கள்

அரசியல்வாதிகள் வெளியில் எதிரிகளாக செயற்படுவதாக காட்டிக்கொண்டு நெருங்கிய நண்பர்களாக சுகபோகமாகவும் வாழ்கின்றார்கள்.

சாதாரண மக்கள் மாத்திரம் அரசியல் காரணிகளைக்கொண்டு பிளவுப்பட்டுள்ளார்கள். பிணைமுறி மாத்திரமல்ல எந்த மோசடியுடன் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்படமாட்டார்கள்” என அவர் இதன்போது தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.