வரதட்சணை எனும் கூர்வாள் குத்தியதால்...!!

மாதவம் செய்து
மங்கையராய் பிறந்து விட்டோம்
பெருங்கடல்கள் பல தாண்டி
சீதனச் சாக்கடையில்
விழுந்துவிட்டோம்...

நிமிர்ந்த நன்நடை
கூன் விழுந்துபோயின...
பெற்றவர்கள் கடனாளி
ஆகியதால்....

நேர்கொண்ட பார்வைகள்
குருடாகிப் போயின..
வரதட்சணை எனும்
கூர்வாள் குத்தியதால்...

நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகள்
சீதன ரொக்கத்தால்
உயிர் மாய்க்கும் நிலையாகிப்போயின...

நிமிர்ந்த ஞானச் செருக்கும்
மூன்று முடிச்சு போட
தட்சணை வாங்கும்
ஆண் வார்கத்தால்
அக்கினிக்குள் ஆகுதியாயின...

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
பொய்யாகிப்போயின..

வரிப் பணமாய் வரதட்சணை
கோடி அள்ளி கொடுத்த பின்னும்
ஈரம் தோய்ந்த விழிகளுடனும்
பாரம் சுமக்கும் நெஞ்சுடனும்
சீதனச் சிறையில் பெண்கள்..
ஆயுள் தண்டணையை
தூக்கு தண்டணையாய்..
மாற்றிக் கொண்டு
அஞ்சியே உயிரை மாய்க்கின்றார்கள்....

சோதரிகளே.... நீங்கள்...
வள்ளுவன் கண்ட வாசுகிகளுமல்ல
கம்பன் கண்ட சீதைகளுமல்ல
பாரதி கண்ட
புரட்சிப் பெண்களாய் ரௌத்திரம் பழகுங்கள்...

புதிய புறநானூறு நமக்காகதான்
எழுதப்படுகிறது....

-சங்கரி சிவகணேசன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.