பச்சை காய்கறிகள் உடலுக்கு ஆபத்தா?

பச்சை காய்கறிகளைச் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்ததால் நடிகர் கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் கலாபவன் மணி. தமிழில் ஜெமினி, புதிய கீதை, பாபநாசம் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர். 2016ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி சாலக்குடி அருகே தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


பிரேத பரிசோதனை செய்ததில், அவரின் உடலில் காய்கறி பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான குளோரோபைரபோஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதனால் கலாபவன் மணியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவியும் சகோதரரும் குற்றம்சாட்டினர்.


இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 30) கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சிபிஐ தனது 35 பக்கம் கொண்ட இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது.


அதில், “கலாபவன் மணி கொல்லப்படவில்லை. பச்சை காய்கறிகளைச் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்ததால் அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்தான குளோரோபைரபோஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மதுவுடன் எத்தனாலையும் கலந்து குடிக்கும் பழக்கமும் இருந்து உள்ளது. 


இறக்கும்போது அவரது உடலில் 4 மில்லிகிராம் எத்தில் ஆல்கஹால் இருப்பது உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கல்லீரல் கெட்டுப்போயிருந்ததால் எத்தனால் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்ற முடியாமல் போனது. கல்லீரல் பிரச்சினைக்கு ஆயுர்வேத மருந்துகளைச் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் மணியின் உடலில் சிறிதளவு கஞ்சாவும் இருந்துள்ளது. கல்லீரல் கெட்டுப் போன நிலையிலும் தொடர்ந்து மது அருந்தியதே அவரின் மரணத்துக்குக் காரணம்” எனத் தெரிவிக்கப்பட்டது.


இயற்கையான காய்கறி, பழங்கள் கூட அதிக விளைச்சலுக்காகப் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்களைச் சேர்ப்பதால் தாவரங்கள் வளரும்போதே ரசாயனத் தன்மையுடன் வளர்கின்றன. இதனால் பல உடல்நலக் குறைவுகளும் ஏற்படுகின்றன. உணவே மருந்து என்கிற நம் முன்னோர்களின் வாக்கைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், 


‘மருந்தற்ற உணவு’ என்ற எளிய இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். எனினும் இதைப் பலரும் செவிமடுத்துக் கேட்பதேயில்லை. இருந்தாலும் பிரபல நடிகர், பச்சை காய்கறிகளைச் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்ததால், அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியைத்தான் தருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.