தமிழ் சினிமா 2019 சிறப்புப் பார்வை-2 :குடை சாய்ந்த கோபுரங்கள்!

தமிழ் சினிமாவில் 2019-ஆம் ஆண்டு வெளியான 209 நேரடி தமிழ் படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே 2020-ஆம் ஆண்டின் புதிய படங்களைப் பார்ப்பதற்குத் தயாராகிவிட்டோம்.

ஆண்டின் தொடக்கத்தில் இன்று(ஜனவரி 3) மட்டும் 9 நேரடி மற்றும் மொழிமாற்று படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலை நிலவரப்படி எந்தப்படமும் மூன்று நாட்கள் கூட திரையரங்குகளில் நீடிக்க வாய்ப்பு இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். கடந்த வருடம் வெளியான படங்களில் நம்பிக்கை நட்சத்திரங்களாக, வசூல் சக்கரவர்த்திகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட கோபுரங்கள் குடை சாய்ந்த தகவல்களைப் பார்க்கலாம்.


சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் ஓப்பனிங் பிரம்மாண்டமாக இருக்கும். ஒரு படத்தில் நடிப்பதற்கு நான்கு கோடி ரூபாய் முதல் ஆறு கோடி வரை சம்பளமாக கேட்கும் சிலம்பரசன் நாயகனாக நடித்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ திரைப்படம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.


ராஜாவாக வந்தவர் சக்கரவர்த்தியாக வசூலில் கல்லா கட்டுவார் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் சிப்பாய் அளவுக்குக்கூட அவரது படம் வசூல் செய்யவில்லை. இந்தப்படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகள் மூலம் கிடைத்த வருவாய் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது என்பதே இறுதி நிலவரம்.


கார்த்தி நடிப்பில் வெளியாகும் படங்கள் வெற்றிப்படமாக இல்லை என்றாலும் சுமாரான வசூலை வாரிக்குவித்து விடும் என்ற நம்பிக்கை திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து வந்தது. அந்த நம்பிக்கையை முற்றிலுமாகத் தகர்த்தெறிந்தது அவர் நடித்த தேவ் படம்.


தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்டவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்தால் படத்தின் வியாபாரமும், வெற்றியும் நிச்சயமானது என்று கூறப்படுவது வழக்கம். இவர் நடிப்பில் வெளியான ஐரா திரைப்படம் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் தாக்குப்பிடிக்கவில்லை. ஒரு படத்தில் நடிக்க 4 கோடி முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கும் நயன்தாரா, அவர் நடித்த படங்கள் திரையரங்குகளில் வசூல் குவிக்கிறதா என்பதை எப்போதும் அறிந்து கொள்வதும் இல்லை, அதைப்பற்றி கவலைப்படுவதும் இல்லை.


ரஜினிமுருகன் வசூலைப் பார்த்து தமிழ் சினிமாவிற்கு மீண்டுமொரு ராமராஜன் கிடைத்துவிட்டார் என்று சந்தோஷப் பட வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது கால்ஷீட் கிடைத்து விட்டாலே படத்தின் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கை இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்டது. வெளி கம்பெனிகளில் நடிப்பதைத் தவிர்த்து நண்பர் ராஜாவுடன் இணைந்து அவர் படத்தயாரிப்பில் ஈடுபட்டாார். சிவகார்த்திகேயனின் வியாபார தன்மைக்கேற்ப தமிழகத்தில் வசூல் இருந்தது. ஆனால் ரஜினிமுருகனைப் போன்று கதையை நம்பாமல் பிரம்மாண்டத்தை நம்பி பெரும் பட்ஜெட்டில் படம் தயாரித்ததால் அவரது படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.


செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதற்கு எல்லா நடிகர்களும் ஆசைப்பட்ட காலம் இருந்தது. ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று இவர் இயக்கிய படங்கள் தோல்வியடைந்தாலும் நம்பிக்கையோடு செல்வராகவன் இயக்கத்தில் வந்த என்.ஜி.கே படத்தில் சூர்யா நடித்தார். தமிழக அரசியலைப் பின்புலமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டதால் படம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். நீண்டகாலமாக சூர்யா ரசிகர்கள் படம் வெளிவர எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, வசூலிலும் என்.ஜி.கே படம் ஏமாற்றம் அடையச் செய்தது.



கதாநாயகன் என்பதை கடந்து கொடுக்கின்ற கதாபாத்திரத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும் ஈகோ இல்லாத நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தயாரான சிந்துபாத் படத்தில் அவரது மகனும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட படங்களின் மூலம் விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்கவேண்டிய கடன் தொகையைத் திருப்பி தராததால் சிந்துபாத் படத்தை ரிலீஸ் செய்வது பெரும் பிரச்சனையாக மாறியது. அதையும் கடந்து படம் வெளியான போதும் வெற்றி கிடைக்கவில்லை.


ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்ரம் நடித்த படம் கடாரம் கொண்டான். தொடங்கிய பொழுது மிகப்பெரும் எதிர்பார்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தியது. ஆனால் வணிகரீதியாக வெற்றியைத் தராமல், கப்பம் கட்டும் குறுநில மன்னராக வாங்கிய அட்வான்ஸ் பணத்தில் பெரும்பகுதியை விநியோகஸ்தர்களுக்கு திருப்பித் தர வேண்டிய சூழலுக்கு தயாரிப்பாளர் ஆளாகிப்போனார்.



மினிமம் கேரன்டி வியாபாரமும், வசூலும் இருக்கக்கூடிய ஹீரோக்களில் சசிகுமாரும் ஒருவர். பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் நடித்த பின்னர் அவருக்கென்று குடும்பங்களிலிருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இருந்தபோதிலும் சசிகுமார் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு குறைந்தபட்ச
ஓப்பனிங் இருந்து வந்தது. முதல்முறையாக பாரதிராஜாவுடன் இணைந்து இவர் நடித்த கென்னடி கிளப், எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது.


சண்டைக்கோழி 2 படத்திற்குப் பின்னர், இந்த வருடம் விஷால் நடிப்பில் அயோக்கியா, ஆக்‌ஷன் என இரு படங்கள் வெளியானது. இரண்டு படங்களும் வசூலில் சாதனையை மட்டுமல்ல சாதாரண வெற்றியைக் கூடப் பெறவில்லை.


விஜய் சேதுபதி வில்லனாக நடித்த பேட்ட படமும், அவர் கதாநாயகனாக நடித்த சிந்துபாத் படமும் தோல்வியைத் தழுவினாலும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தப்படம் திட்டமிட்ட அடிப்படையில் ரிலீசாவதில் சிக்கலை சந்தித்தது. அதுவே அந்த படத்துக்கும் பின்னடைவாக அமைந்தது. எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என இருதரப்புக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிப்பு செய்தும் வராமல் முடங்கிக் கிடந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் முயற்சி எடுத்து ரிலீஸ் செய்தார். ஆனால் முதல் வாரத்திலேயே படம் வசூல் ரீதியாகத் தோல்வியைச் சந்தித்தது.


இந்த ஆண்டில் வெளியான படங்களில் மேற்கண்ட 14 படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாமல் போனது. தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் படங்களை நம்பியிருந்த திரையரங்குகளுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி தோராயமாக 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படச் செய்தது
-இராமானுஜம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.