அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார்- அமெரிக்கா தகவல்!!!

அரபு நாடுகளில் அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கான திட்டங்களை வகுத்த, அரேபிய தீபகற்ப பிராந்தியத்தின் அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவுக்குத் தலைமை தாங்கிய காசிம் அல்-ரெய்மி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.


அமெரிக்க இராணுவ படையினர் யேமனில் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் காசிம் அல்-ரெய்மி கொல்லப்பட்டுவிட்டதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலில், காசிம் அல்-ரெய்மி கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த மாதத்தின் இறுதியில் தகவல்கள் பரவி வந்தன.

இதனை மறுக்கும் வகையில், அல்-ரெய்மியின் ஒலிப்பதிவு ஒன்றை கடந்த இரண்டாம் திகதி அல்-கொய்தா பயங்கரவாதக் குழு (ஏகியூஏபி) வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவரை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் காசிம் அல்-ரைமி தொடர்புடையவர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியா மற்றும் யேமனை களமாக கொண்டு, அரபு நாடுகளில் அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளை எதிர்த்து கடந்த 2009ஆம் ஆண்டு அரபு நாடுகளில் அல்-கொய்தா அமைப்பை (ஏக்யூஏபி) உருவாக்கி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

அரேபிய பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான படைகள் உட்பட அனைத்து மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டு இது இயங்கி வந்தது.

மேலும், அல்-கொய்தா உலகத் தலைவர்களில் ஒருவரான அயமான் அல்-சவாஹிரிக்கு துணையாக செயல்பட்டு வந்துள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவுக்குத் தலைமை தாங்கிய காசிம் அல்-ரெய்மி, மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர் ஆவார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.