சாய்ந்தமருது நகரசபை உதயமாகின்றது !

சாய்ந்தமருது நகரசபை வழங்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இன்று மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை இந்த கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், அதனை சீர் செய்யும் முகமாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து புதிதாக உதயமாகின்ற சாய்ந்தமருது நகரசபை குறித்து அந்த பகுதி மக்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
“சாய்ந்தமருது மக்கள் கல்முனையிலிருந்து பிரிந்து செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

சில தரப்பிடம் காணப்பட்ட பிரதேசவாதம் மற்றும் கல்முனைக்குடி முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் புறக்கணிப்பு, கல்முனை மாநகரசபை மேயராக சாய்ந்தமருதை சேர்ந்தவர்களை நியமிப்பதில் தடை போன்றவற்றால் சாய்ந்தமருது இமாளிகைக்காடு உள்ளடக்கிய பகுதியையும், காரைதீவு எல்லையாக கொண்ட பகுதி சாய்ந்தமருது நகரசபையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


இது அந்த பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாகவும், அதே நேரம் கல்முனை தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சரிவை எதிர்நோக்கியுள்ளன.

சாய்ந்தமருது மக்களிடையே இச்சபை செயற்பாட்டை செயலுருவாக்கிய தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் கை ஓங்கியுள்ளதாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினார்கள்.


கல்முனையில் இருந்து சாய்ந்தமருது பிரிந்து செல்வதால் தமிழ் மக்கள் சந்தோசப்படுவதை விட ஒரு நீண்ட காலமாக மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அவர்கள் பார்க்கின்றார்கள்.

சாய்ந்தமருது மக்களை போன்றே நிர்வாக ரீதியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என அழைக்கப்படும் தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்வு நீண்டகால பிரச்சினையாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.