மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கொரோனா தொற்று

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கொரோனா தொற்று என சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று இல்லை என வைத்தியசாலை நிருவாகம் உறுதிப்படுத்தியுள்ளது.


கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் வந்த போரதீவுப்பற்று திக்கோடை பகுதியினை சேர்ந்த 47வயதுடைய நபர் நேற்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தபோது அவருக்கு கொரோனாவுக்கான நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியுலன்ஸை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் 09 பேரைக் கைது செய்தனர்.

குறித்த நபர் கொழும்பில் உள்ள ஹோட்டலொன்றின் கட்டட பணிகளில் சீனா நாட்டவர்களுடன் ஈடுபட்டதனாலும், நோய் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபரின் பரிசோதனை முடிவுகள் இன்று மதியம் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும் பரிசோதனையின் அடிப்படையில் எந்தவித தொற்றும் இல்லாத காரணத்தினால் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Blogger இயக்குவது.