பேராசிரியரின் இறுதிப் போராட்டம்!

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு சிகிச்சை பலனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், திமுகவின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் பிப்ரவரி 24ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல் 35 சதவிகிதம் மட்டுமே மருந்தை ஏற்றுக்கொள்கிறது என்று மருத்துவர்கள் வட்டாரத்தில் சொல்வதாக நாம் ஏற்கனவே பேராசிரியர் உடல்நிலை: மருந்தை ஏற்க மறுக்கும் மூப்பு தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகனுக்கு செயற்கை சுவாசத்திற்காக பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டர் இன்று காலை (மார்ச் 6) 11 மணியளவில் அகற்றப்பட்டது. அதன்பிறகு அவரது பல்ஸ் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. இப்போது கடுமையான மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருகிறார். வாய்வழியாக குறைவான அளவில் சுவாசம் வந்துகொண்டிருக்கிறது.

சரியாக இன்று இரவு 8.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அன்பழகனை பார்த்த பிறகு சேகர்பாபு, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அவசரமாக வெளியே சென்றுள்ளார்.

ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பேராசிரியருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பயனளிக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

எழில்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.