நோயைக் கட்டுப்படுத்த கரம் கோர்க்கிறது தென்கிழக்காசிய பிராந்தியம்!!

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா, வியட்னாம், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், மியன்மார், உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் தமது பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று காணொளி மூலம் கலந்துரையாடினர்.
குறித்த பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அவ்வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டது.
இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பாரிய சுகாதார நெருக்கடி கொரோனா வைரஸ் எனவும் குறித்த பரவளில் இருந்து தென் கிழக்காசிய பிராந்தியத்தினை காப்பாற்றுவதற்கு அதன் அங்கத்துவ நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதவரை அதன் அங்கத்துவ நாடுகள் எவையுமே பாதுகாப்பாக இருக்க முடியாது என சிங்கப்பூர் பிரதமர் லீ ஹுசெய்ன் லூங் (Lee Hsien Loong) தெரிவித்தார்.
வியட்னாம் பிரதமரின் முயற்சியால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த பேச்சுவார்த்தையில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தை தமது பிராந்தியத்தில் ஒழிப்பதற்கு தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் இணைந்து செயற்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இதுவரை 850க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.