அடிப்படை வசதிகள் இன்றி அவலப்படும் பெண்கள்!!

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்முகமாக அரசாங்கம் மேற்கொண்ட ஊரடங்குச் சட்ட நடைமுறை எமது நாட்டில் கொரோனா தொற்று பரவலை பாரிய அளவுக்கு குறைத்தது என்பது உண்மையே.

ஆனாலும், இவ்வாறான சட்ட நடைமுறைகள் வறுமையையும் பசியையும் குறைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஊரடங்கு நடைமுறை இலங்கையில் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே முற்றாக கேள்விக்குறியாக்கிய நிலையில் நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் வறுமைக் கோட்டுக்குக் உட்பட்ட குடும்பங்களின் நிலை பெரும் அவலமாகவே அமைந்துள்ளது.
இவ்வாறான நிலையிலும் ஒரு நேர உணவிருந்தாலே போதும் என்ற மன நிறைவுடன் ஊரடங்கு நிலையைக் கடந்த சில குடும்பங்களே இவை. இந்தக் குடும்பத்தினர் யாரும் மிகவும் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை.
வன்னிப் பெருநிலப்பரப்பின், மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அருகம் குன்று கிராமத்தைச் சேர்ந்தவர்களே இவர்கள்.
வறுமை இவர்களுக்கு பழக்கமே என்றாலும் வறுமையிலும் உழைத்து உயிர் வாழ்ந்தாலும் இந்த ஊரடங்கு இவர்களின் வாழ்கையை உலுக்கிப் போட்டுள்ளது.
இந்தப்பகுதியில் உள்ள அநேகமான குடும்பங்கள் கூலித்தொழில் செய்து வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துகின்றனர். ஊரடங்குச் சட்டம் காரணமாக இவர்களால் கூலித் தொழிலிற்கும் செல்லமுடியவில்லை.
எம்மவர்களில் சமையல் அறை போன்று தான் அவர்களின் வீட்டின் பரப்பு காணப்படுகின்றது. ஓட்டைகள் நிறைந்த ஓலைக் குடிசை, புகை மண்டலம் நிறைந்த சமையல் அறை போன்றது அந்த வீடு.
தாயின் பாலுக்காய் காத்திருக்கும் கைக் குழந்தை காலை உணவுக்காக காத்திருக்கும் ஏனைய குழந்தைகள் என பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
ஒழுங்கான வீடு இல்லை, நீர் வசதி இல்லை, தொடர்ந்து செய்யத் தொழில் இல்லை, தமக்கு என ஒரு தற்காலிக வீடுகளை அமைத்துத் தாருங்கள் எனக் கோருகின்றனர் இப்பகுதி மக்கள்.
வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தும் மலசல கூட வசதி இன்றி காடுகளுக்குச் செல்லும் நிலை. இவர்களுக்கான தற்காலிக ஏற்பாட்டையாவது அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.