அத்துரலிய ரத்ன தேரர் ஜனாதிபதி கோத்தாபயவிற்கு எதிராக குற்றச்சாட்டு!!
பொதுத்தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சி (அபே ஜனபல வேகய) பிரதமர் பதவியை கைப்பற்றும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட பொதுச்சட்ட கொள்கையினை முறையாக செயற்படுத்தவில்லை.
நாட்டின் தேசிய அடிப்படை பிரச்சினைகளை இரு தரப்பு அரசியல்வாதிகளும் தேர்தல் காலத்தில் அரசியல் பிரச்சாரங்களுக்கு மாத்திரமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குற்றஞ்சாட்டினார்.
அபே ஜனபல வேகய கட்சியின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருததுரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்..
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுத்தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சியினை மேற்கொள்கின்றது. தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த முடியும் என சுகாதார தரப்பினர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினால் பொதுத்தேர்தலில் போட்டியிட நாம் தயாராகவே உள்ளோம்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார். என்ற தவறான கருத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலில் தனி பௌத்த உரிமைகளுக்க முன்னுரிமை கொடுத்து அபே ஜனபல பக்சய கட்சி ஊடாக நாமிருவரும் நிச்சயம் போட்டியிடுவோம்.
தனி சிங்கள பௌத்த மக்களின் அபிப்ராயத்தை பெற்று நாட்டு தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நெடுநால் எதிர்பார்ப்பு கடந்த ஜனாதிபதி தேர்தல் ஊடாக வெற்றிக் கொள்ளப்பட்டது. ஜனாதிபதியின் கொள்கையினை செயற்படுத்தும் பாராளுமன்றம் பலமான அமைச்சரவை பொதுத்தேர்தல் ஊடாக தோற்றம் பெற வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் 69 இலட்ச மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கு முரணாகவே செயற்படுகின்றது. இஸ்லாமிய அடிப்படைவாதம், காதி நீதிமன்றம், மற்றும் நாட்டை பிரித்தாளும் கொள்கை ஆகியவை தற்போதும் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.
நாட்டின் தேசிய அடிப்படை பிரச்சினைகளை இரு தரப்பு அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் பிரச்சாரத்துக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுகிறார்கள். இந்த நிலைமை இடம் பெறவுள்ள பொதுத்தேர்தல் ஊடாக மாற்றியமைக்கப்படும்.
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் பொதுச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும் என்ற கருத்தினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசியல் பிரச்சார கூட்டங்களில் மிக அழுத்தமாக தொடர்ந்து வலியுறுத்தினார்.
அந்த விடயம் தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் பொது சட்டம் ஒவ்வொரு தரப்பினருக்கும், ஒவ்வொரு விதமாகவே செயற்படுத்தப்படுகின்றது. காதி நீதிமன்றம் தொடர்பில் அரசாங்கம் செயற்படும் விதம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டஙக உள்ளது.
குருநாகல், கொழும்பு மாவட்டங்களில் இரத்து செய்யப்பட்டுள்ள அபே ஜனபல வேகய கட்சியின் வேட்பு மனுக்கல் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறும். பொதுத்தேர்தலில் பிரதமர் பதவியை எமது கட்சியே கைப்பற்றும். என்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




