ஜனாதிபதி பொலிஸாருக்கு விடுத்துள்ள உத்தரவு


லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்வோர் கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய நிறுவனங்கள் பின்பற்றும் வழிமுறைகள் சட்டவிரோதமானது என்பதால், அதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வாகனங்களை பறிமுதல் செய்கின்றமை தொடர்பில் லீசிங் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை பொறுப்பேற்க வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். கொவிட்-19 பரவல் காரணமாக லீசிங் கடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு இரத்து செய்யுமாறு ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், கடன் தவணைகளை செலுத்தத் தவறிய நபரின் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயல் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கடன் தவணைகளை செலுத்தத் தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளார்.
Blogger இயக்குவது.