வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படையினர்!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக இராணும் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு இவ்வாறு அரச உயர்மட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைகள், மணல் கடத்தல் கும்பல்களில் அடாவடிகள் நீடித்து வந்த நிலையில் பொலிஸாரால் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள்களால் அச்சுறுத்தல் நிலை எழுந்திருந்தது. அதுதொடர்பில் கடந்த 17ஆம் திகதி பலாலியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் படைகளின் உயர்மட்ட மாநாடு ஒன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டின் போது, யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுத்தல் ஆகியவற்றை இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன்பிரகாரம் இராணுவத்தால் கைது செய்யப்படுவோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்தவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு அரச உயர்மட்டமும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி வாள்வெட்டு வன்முறை வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் தேடுதல் நடத்தும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர், சந்தேக நபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கின்றனர்.
யாழ்ப்பாணம் கொழும்புத் துறையில் சந்தேக நபர்கள் இருவரின் வீடுகளுக்கு கடந்த வாரம் சென்ற இராணுவம் வாள்களை மீட்டிருந்ததுடன் அவர்கள் இருவரையும் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தது. அவர்களில் ஒருவர் தாக்குதல் வழக்கு ஒன்றில் பிணையில் வெளியில் வந்தவராவார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் பொலிஸாரால் போடப்பட்ட வழக்குகளை நிறைவு செய்யும் நோக்குடன் ஆவா என்று பொலிஸாரால் அழைக்கப்படும் வினோதன், கடந்த 6 மாதங்களாக வழக்குகளில் ஒழுங்காக முன்னிலையாகி வரும் நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்றை தினம் இணுவிலில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
எனினும் வினோதனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் புதிதாக இல்லாத நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
தற்போது நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவைகள் உள்ள சந்தேக நபர்களின் வீடுகள் அமைந்துள்ள இடங்களில் இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கை பொலிஸாருக்கும் கடும் அழுத்தத்தை வழங்கியுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.