சிறுவன் தாரீக் துன்புறுத்தப்பட்டமை குறித்து விசாரணை அவசியம்!
அளுத்கம -தர்ஹா நகர் பகுதியில் 14 வயது சிறுவனொருவரை பொலிசார் தாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், தர்ஹாநகரை சேர்ந்த 14 வயதுடைய தாரிக் எனப்படும் சிறுவன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு 14 வயது ஆகின்ற போதிலும் ஆறுவயது சிறுவனக்குரிய மனோநிலையிலையையே அவன் கொண்டிருக்கின்றான்.
கடந்த மேமாதம் 25 ஆம் திகதி தனது துவிச்சக்கரவண்டியில் தர்ஹாநகரில் அமைந்துள்ள அம்பஹாக நகரத்திற்கு தாரிக் சென்றுள்ளார்.
இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட சோதனைச்சாவடியில் இருந்த பொலிஸார் அவரை தடுத்துள்ளதுடன், துவிச்சக்கர வண்டியிலிருந்த சிறுவனை கீழே இழுத்து தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர்.
இதன்போது சோதனை சாவடியில் இருந்த ஆறு,ஏழு பொலிஸாரும் அனைவரும் தாரீக்கை தாக்கியுள்ளதுடன், அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் சிலரும் தாக்கியுள்ளனர்.
தாரீக் ஒரு மனநோயாளி என்பதினால் பொலிஸாருக்கு அவனால் உரியமுறையில் பதிலளிக்க முடியவில்லை. இதனால் பொலிஸாரினால் தாக்கப்பட்ட தாரீக் தொடர்ந்தும் அழுது கொண்டிருந்த காரணமாக பொலிஸார் அவனது கைகளை பின்னால் இழுத்துக் கட்டிமரத்தின் அருகே காணப்பட்ட மின்கம்பத்துடனும் சேர்த்துக் கட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தை பலர் அவதானித்துள்ளதுடன், அவர்களுள் ஒருவர் தாரீக்கின் தந்தையை நன்கறிந்தவர் என்பதனால் சம்பவம் தொடர்பில் தாரீக்கின் தந்தைக்கு தெரியப்படுத்தி அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு சென்ற அவர், தாரீக்கை விடுவிக்குமாறும், தனது மகன் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதையும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அவரையும் திட்டிதீர்த்துள்ள பொலிஸார், தனது மகன் தாரீக் வீட்டைவிட்டு வெறியேறிமைக்கு தானே காரணம் என கடிதமொன்றை தங்களுக்கு வழங்கினாலே தாரீக்கை விடுவிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
அதன் பின்னர் பொலிஸார் கூறியதைப் போன்று கடிதமொன்றை கொடுத்துவிட்டு பொலிஸாரின் பிடியிலிருந்த தனது மகனை அவர் அழைத்துச் சென்றுள்ளார்.
அத்துடன் பொலிசாரின் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த தாரிக்கை பொலிஸார் மீது கொண்ட அச்சம் காரணமாக அவரது தந்தை வைத்தியசாலையில் கூட அனுமதிக்காமல் இருந்துள்ளார்.
அதன் பின்னர் அயலவர்கள் அவருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையித்தில் இது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளார், இதன்போது அவர்கள் தந்தையே மகன் வீட்டை விட்டு வெளியேறக்காரணம் என்பதால் தங்களால் முறைபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புறக்கணித்துள்ளனர்.
பின்னர் அப்பகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்குச் சென்று முறைப்பாடு அளித்துள்ளனர்.
அவர்களின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக தோன்றாததினால், அயலவர் சிலரின் உதவியுடன் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் இந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்தபோது தாரீக்கை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தாரீக்கின் தந்தையும் நாகொட சட்ட வைத்தியரிடம் தாரீக்கை அழைத்துச் சென்றுள்ளதுடன், அவர் பொலிஸ் உத்தியோகஸ்தரை பார்த்து இந்த சிறுவனை எதற்காக இங்கே அழைத்து வந்தீர்கள்.
இவரை அங்கொடை வைத்தியசாலையில் அனுமதித்திருக்க வேண்டும். இவ்வாறான முஹ்லீம்களினாலேயே இன்று நாங்கள் முகக்கவசம் அணியவேண்டி ஏற்பட்டுள்ளது இவனுக்கு இது தேவை இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என கூறியுள்ளார்.
அத்துடன் அதனை நான் வழங்குவேன் என்றும் சிறுவன் தாரிக்கை மனநல வைத்தியரிடம் அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.பின்னர் தாரீக் பல காலமாக மனநலம் தொடர்பில் மருந்து எடுத்துக்கொள்ள வில்லை என்றும் அவரை அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்போது அங்கு வந்த உளநலநிபுணர் தாரீக்கை நன்கு அறிந்திருந்தமையினால் தாரீக் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருபவர் எனவும் அவருக்குரிய மருந்துவகைகளையும் வழங்கி வைத்தியசாலையிலிருந்து அனுப்பிவைத்துள்ளார்.
இதற்கு பின்னர் இந்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.ஆயினும் குறித்த சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி காட்சிகளையும் தாரீக்கின் தந்தை உள்ளிட்ட சிலர் இணைந்து வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
அதோடு பொலிஸாரின் முறைக்கேடான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு செயற்பாடுகள் தற்போது வெளியிடப்பட்டு வருவதுடன், பொலிஸார் இவற்றை மறைக்க முயற்சித்தாலும் சமூகவலைத்தளங்களின் பாவனை தற்போது அதிகரித்துள்ளமையினால். இதனை அவர்களால் முறையாக மேற்கொள்ள முடியவில்லை.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலப்பகுதியிலும் இவ்வாறான முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் சிறப்பு குழுவினை நியமித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




