மாநிலங்களை மிரட்டுகிறதா மத்திய அரசு

கல்லூரி தேர்வுகள் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.



கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அனைத்து மாநிலங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதிப் பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்; இறுதித் தேர்வை ரத்து செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலர் அமித் கரே, “பள்ளிக்கல்வி மட்டும் தான் மாநிலப் பட்டியலில் உள்ளது. உயர்கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. அதனால்,பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்யும் விஷயத்தில் மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அவ்வாறு தேர்வுகளை ரத்து செய்தால், அதன்மீது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

இது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல் ஆகும் என்று விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுதொடர்பாக இன்று (ஜூலை 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த எச்சரிக்கை, மாநில அரசுகள் மீதான தமது அதிகாரங்களை நிலை நாட்டும் ஆதிக்க முயற்சி தானே தவிர, மாணவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல; மத்திய அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது ஆகும்” என்று கூறியுள்ளார்.

உயர்கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதை மத்திய அரசு மதித்திருந்தால், பல்கலைக்கழகத் தேர்வுகளை அனைத்து மாநிலங்களும் செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதுதொடர்பாக எந்த மாநில அரசுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை என்று கூறிய ராமதாஸ், பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தாது. ஆனால், மத்திய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு, மாநிலங்களை எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாத அலங்கரிக்கப் பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முயல்வது ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி தத்துவத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகளின் ஆசை அல்ல. மாறாக சூழல் தான் இத்தகைய முடிவெடுக்க காரணமாக உள்ளது. இதை உணர்ந்து கொண்டு, இறுதிப் பருவத் தேர்வுகள் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

எழில்
Blogger இயக்குவது.