அமைச்சரின் மகனைக் கண்டித்த பெண் காவலர் இடமாற்றம்

குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியை, ‘யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என்று கண்டித்த பெண் காவலர் சுனிதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.


குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவர் மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சூரத் நகரில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித் திரிந்ததாகத் தெரிகிறது. அவர்களைப் பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தியுள்ளார். இதை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பெண் காவலர் சுனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது சுனிதா, ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என கடுமையாகக் கண்டித்துள்ளார். அதன் பின்னர் அமைச்சரின் மகனும் பதிலுக்குக் காவலரை எச்சரிக்க, காவலர் உரிய பதிலை அளித்துள்ளார்.

இந்த வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. இந்தச் சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் பெண் காவலர் சுனிதா, காவல் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால், இந்தப் பிரச்சினைக்குப் பிறகு காவலர் சுனிதா விடுப்பில் சென்றுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும் வைரலாகப் பரவும் இது தொடர்பான வீடியோ பெரும் சர்ச்சையாகி வருகிறது.

-ராஜ்
Blogger இயக்குவது.