ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினைக் கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவின் முன்னாள் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடி இன்று (சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
கொழும்பில் நேற்று ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தனவை போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியுமால் ரங்க ஜீவவினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
இதனைக் கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கலந்துகொண்டனர்.
இதன்போது, ‘ஊடக சுதந்திரம் வேண்டும்’, ‘ஊடகவியலாளரை அச்சுறுத்திய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’, ‘ஊடகவியலாளரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்’ என ஊடகங்களுக்கெதிரான நெருக்குதல்கள் தொடர்பிலான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஊடக ஒன்றியம் தெரிவிக்கையில், “ஊடகங்கள் காலங்காலமாக நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டே தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன. நெருக்கடிகளற்ற ஒரு ஊடகக் கலாசாரம் உலகளவில் அமைந்துவிட வேண்டும் என்பதில் ஊடகக்காரர்களும் ஊடகங்களும் பல்வேறு அமைப்புகளும் ஆர்வலர்களும் முயன்று கொண்டிருந்தாலும் அது சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.
இச்சம்பவம், தற்போதைய நேரத்தில் அனைத்து ஊடகங்களின் பார்வையையும் பெற்றுள்ளதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படுவதற்கு அல்லது தவிர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அனைவரும் மேற்கொண்டாக வேண்டும்.
அந்தவகையில், நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாதவாறு ஒரு சிறப்பான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதுடன், அதனுடன் தொடர்புடையவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதும் முக்கியமாகும்.
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்குக் குரல் கொடுப்பதும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதனைத் தவிர்ப்பதற்காகப் பாடுபடுவதும் ஊடகம் சார் அக்கறையுள்ள ஒவ்வொருவரதும் பணியும் கடமையுமாகும்” என்று குறிப்பிட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.