இயக்கச்சி பகுதியில் வெடிகுண்டு தயாரிப்பு - முன்னாள் போராளி உட்பட ஆசிரியை திடீர் கைது!!
குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடயப் பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முந்தினம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பிளாஸ்ரிக்கில் செய்யப்பட்ட குண்டு 2, கரும்புலி நாள் சுவரொட்டி 1, கையடக்க தொலைபேசி 1, மடிக்கணினி 1, டொங்குள் 1, பென்கமெரா 1, சிடி 1 ஆகியன மீட்கப்பட்டன்.
வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் கைது செய்யப்பட்ட ஆசிரியையான குறித்த பெண் சட்ட ரீதியற்ற முறையில் திருமண வாழ்க்கையை முன்னெடுத்து வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண் குற்ற செயலிற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடய பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் முன்னாள் போராளி எனவும், அவர் ஜனநாயக போராளிகள் கட்சியின் அங்கத்தவராக செயற்பட்டு வந்ததாகவும் பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்ற தடுப்பு பிரிவு, பொலிசார், புலனாய்வு பிரிவு ஆகிய தரப்பினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo