ஜூலை 31 முதல் இலங்கையர்களை அழைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!!
வேலை இழப்பு மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் நாடுகளில் தங்குமிட வசதிகளை இழந்துள்ளனர் என்றும் மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டிய நிலையில் சுமார் 6,000 முதல் 8,000 பேர் இருப்பதாகவும் வெளிவிவகார ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் முதலாவது விமானப் பயணம் ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 1 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த இரு திகதிகளில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இரண்டு விமானங்கள் அங்கு சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நாட்டினை வந்தடையும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாடு திரும்ப விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்த இலங்கையர்கள் அனைவரையும் நாடு திரும்புவதற்கு அரசாங்கம் வழிவகை செய்யும் என்றும் ஜயநாத் கொலம்பகே கூறினார்.
மேலும் பல நாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் 50,000 பேர் மாத இறுதியில் நாட்டினை வந்தடைய விரும்புகின்றார்கள் என்றும் கொலம்பகே சுட்டிக்காட்டினார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டமையினாலும் ஆயிரக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்குள் கொண்டு செல்லப்பட்டதாலும், ஜூலை 14 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட பின்னர், இந்த நடவடிக்கை செப்டம்பர் மாத தொடக்கம் வரை தள்ளிவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இப்போது தொற்று முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும் சமூகத்தில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்பதாலும் நாட்டுக்கு அழைத்துவருவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், கந்தக்காட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்த நிலையில் ஆரம்பத்தில் திட்டமிட்டபடி செப்டம்பர் வரை பண்டாரநாயக்க விமான நிலையம் மூடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை