இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துகிறதாம்?

 இலங்கையில், கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்களை இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுநோய் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்ற அதேவேளை, பாதிக்கப்பட்ட முதலாவது நபரைக் கண்டுபிடிக்க அதிகாரிகளால் இயலாத நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவ கொரோனா தடுப்பு நடவடிக்கை இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களை பாதித்துள்ளது, அந்நிய செலாவணி வருவாயைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக இவர்களே காணப்படுகின்றனர்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும், சிவில் சமூக அமைப்புகள், தொற்றுநோயை அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பெண் தொழிலாளர்கள் நடத்தப்படுவது தொடர்பாக அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தெளிவான தகவல்கள் அல்லது சரியான வழிகாட்டல்கள் இன்றி, பாதுகாப்பற்ற போக்குவரத்து, தூய்மையில்லாத தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் மற்றும் தொழிலாளர்களை பேருந்துகளில் ஏற்றுவதற்கு முன்னதாகவும், நிலையங்களுக்கு நுழைவதற்கு முன்னரும் பிசிஆர் சோதனைகளை நடத்த இயலாமை ஆகியன, அரசாங்கம் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அந்த அமைப்புகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளன.

ஒக்டோபர் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில், கட்டுநாயக்க – லியனகேமுல்ல, பகுதியில் அமைந்துள்ள, ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் கர்ப்பிணித் தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் 25 பெண்கள் உள்ளிட்ட 45 தொழிலாளர்கள், இராணுவத்தால் களுத்தறையில் தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள விடுதியில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றமையால், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தில், அவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

“எங்கள் பொருட்களைக் எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறுவதற்கு எங்களுக்கு சில நிமிடங்களே வழங்கப்பட்டன. எங்கள் உடைகளைக் எடுப்பதற்குக் கூட எங்களுக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் எங்கள் தலைமுடியை வாருவதற்குக் கூட எங்களுக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. நாங்கள் ஒரு தேசியக் குற்றத்தைச் செய்ததைப் போல, கைதிகளைப் போலவே நடத்தப்படுகிறோம்.” என தொழிலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையின்படி, அவர்கள் வெயாங்கொடவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டடிருந்தாலும், அவர்கள் தொலைபேசி சமிக்ஞைகள் குறைவாக காணப்படும் களுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதே நாளில் அதிகாலை 12.30 மணியளவில், எவரிவத்தையில் 53 ஊழியர்கள் (35 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட) அவசரமாக பஸ்ஸில் அழைத்துச்கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

“இராணுவம் நள்ளிரவில் வந்து எங்கள் பொருட்களைக் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறுவதற்கு 10 நிமிடங்கள் கொடுத்தது. எனது பிசிஆர் பரிசோதனை எதிர்மறையானது என இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. அதனை காட்டுவதற்குக்கூட எனக்கு அனுமதி இல்லை. அவர்கள் யாரையும் பேச அனுமதிக்கவில்லை. அவர்கள் எங்களை பஸ்ஸில் இழுத்து இங்கு அழைத்து வந்தார்கள் ” என களுத்துறைக்கு வந்த ஒரு தொழிலாளி குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு மற்றும் அமந்தோலுவ பிரதேசங்களில் அதிகமான தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, ஒக்டோபர் 12 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் அவர்கள் காட்டுநாயக்கிலிருந்து புறப்பட்டனர்.

12 மணி நேரம் கழித்து மதியம் 12.30 மணிக்கு, அவர்கள் களுத்துறையை அடைந்தனர், அதுவரை எந்த உணவும் தண்ணீரும் எமக்கு கொடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு சென்றபின் அவர்களுக்கு சிறிது உணவு வழங்கப்பட்டது, ஆனால் அவை சாப்பிட முடியாதவை என சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளையின் சந்துன் துடுகல தெரிவிக்கின்றார்.

”அந்த இடத்தில் உள்ள கழிப்பறைகள் நிரம்பி வழிகின்றன, அழுக்காக இருந்தன, அதுவரை (ஒக்டோபர் 13 நிலவரப்படி) எந்தவொரு சுகாதார நிபுணர் அல்லது பொது சுகாதார பரிசோதகரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சில காணொளிகள் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் அவலநிலையைக் காட்டுகின்றன. ஒரு காட்சியில், ஒரு பெண் தனக்குக் கிடைத்த சாப்பாட்டுப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு, அது சமைக்காத கறுவாட்டின் வாசனை வீசுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு வைத்தியர் எங்களைப் பார்க்க வருவதாக நாங்கள் கேள்விப்பட்டோம். எனினும் எங்களுக்கு உத்தியோபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

ஒக்டோபர் 13 வரை, தொழிலாளர்களுக்கு செருப்பு, சவர்க்காரம் மற்றும் சலவை தூள் போன்ற அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டன, எனினும், சுமார் 400-500 தொழிலாளர்களுக்கு குறைந்த வசதிகளுடன் இருப்பதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு அறையில் ஆறு அல்லது ஏழு தொழிலாளர்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள், சில அறைகளில் மூன்று முதல் ஐந்து தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.

சுமார் 30 தொழிலாளர்களுக்கு இரண்டு குளியலறைகள், 2 கழிப்பறைகள் மற்றும் 2 கைகழுவுவதற்கான இடம் மாத்திரமே காணப்படுகின்றன.

ஒரு தொழிலாளி வைரஸால் பாதிக்கப்பட்டால், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் அவர்கள் அனைவருக்கும் இந்த நோய் பரவும் என தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

“இந்த அறைகளில் உள்ள தளங்கள் தூசி நிறைந்தவை, கழிப்பறைகள் மிகவும் அழுக்கடைந்தவை. நாங்கள் இப்படி வாழப் பழகவில்லை, எனவே நாங்கள் எங்கள் அறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தோம். நாம் தொடர்ந்து இப்படி வாழ்ந்தால், நாம் கொரோனாவால் இறக்கமாட்டோம், ஆனால் வேறு நோய்களால் இறப்போம். இந்த சூழ்நிலையை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், நாங்கள் வாக்களித்த அரசாங்கத்தை மாற்ற வேண்டுமென வலியுறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம்”என அவர்கள் கூறுகின்றனர்.

“எனக்கு மாரடைப்பு, இரண்டு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நான் நிறைய மருந்துகள் குடிக்கின்றேன். நான் இங்கு இருக்கின்ற காரணத்தினால், மரணத்திலிருந்து என்னால் தப்பிக்க முடியாது. இந்த இடம் நாய்களுக்கு கூட ஏற்றதல்ல. இந்த மக்களுக்கு வாக்களித்ததற்காக எங்களை நாங்களே அடித்துக்கொள்ள வேண்டும்.” என மற்றொரு ஊழியர் கூறியுள்ளார்.

சுதநதிர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்கள், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின்றி கூட, வைரஸ் பரவுவதை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய தனிமைப்படுத்தலை நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அரசாங்க விதிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல்களைக் கடைப்பிடிக்கவும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றவும் தாம் தயார் எனத் தெரிவித்துள்ள தொழிலாளர்கள் முறையான நடைறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

எங்களை தனிமைப்படுத்த வரும் துருப்புக்களை மனிதநேயத்துடனும் மரியாதையுடனும் நடத்த பயிற்சி அளிக்க வேண்டுமென அவர்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கையின் முதல் கொரோனா அலையை எதிர்கொண்டு வர்த்தக வலைய தொழிலாளர்களை, கடமையில் இருந்த இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

“இந்த வருட ஆரம்பத்தில் முதல் முடக்கம் இடம்பெற்றபோது, கடுமையான வெயிலில், வீரர்கள் பதுங்கு குழியின் அருகே நின்று கொண்டிருந்தார்கள், நாங்கள் எங்கள் பணத்தில் தண்ணீர் போத்தல்களை வாங்கிக் கொடுத்தோம், நாங்கள் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றோம் என்பதற்காக, முட்டாள்கள் அல்ல, எங்களுக்கும் உரிமைகள் உள்ளன.” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நோய்வாய்ப்படுவது ஒரு குற்றமாக கருதும் தொழிலாளர்களை அவர்கள் துன்புறுத்துவது, அவர்களின் உழைப்பில் வாழ்பவர்களே என வலியுறுத்தப்பட்டுள்ளது.

“அவர்கள் எங்களால்தான் நன்றாக இருக்கிறார்கள், எனினும் நாங்கள் அவர்களால் வாழ்வதுபோல் எங்களை நடத்துகிறார்கள், அவர்கள் தான் எம்மை தொல்லை செய்கிறார்கள். அவர்கள் எங்களை முக்கியமாக வசதி படைத்தவர்களாக எண்ணாததால் நாங்கள் இப்படி நடத்தப்படுகிறோம், ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது எங்கள் தவறு அல்ல, அவர்கள் எங்களை பழிவாங்குவது போல் நடத்துவதை அவர்கள் நிறுத்த வேண்டும். இதை எங்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.