மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டியதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க!



அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தம் தொடர்பில் நாட்டு மக்களும், மத தலைவர்களும் சுட்டிக்காட்டிய விடயங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.

ரச அதிகாரங்களை குடும்ப ஆட்சிக்குள் கொண்டு வர முன்னெடுக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மினுவாங்கொடை கொத்தனியில் மூலம் இதுவரையில் கண்டுப்பிடிக்கப்படவில்லை. கிராம பகுதிகளுக்கும் வைரஸ் தொற்று தீவிரமாக பரவலடைந்துள்ளமை கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் சமூக பரவல் நிலையினை வெளிப்படுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதார நிலையில் உள்ளதாகவும், சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளும் நிலையில் காணப்படுகிறது என்றும் சர்வதேச   பொருளாதார மற்றும் முதலீடு தொடர்பான மதிப்பீடு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. மக்கள் வழங்கிய ஆணையை தவறான வழியில் பயன்படுத்த அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட பாரதூரமான ஏற்பாடுகளை நாட்டு மக்களும், மத தலைவர்களும் சுட்டிக்காட்டினார்கள். இவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.

புதிய அரசியலைப்பு உருவாக்கத்துக்கு நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை புறக்கணித்து அரசாங்கம் சர்வாதிகார போக்கில் செயற்படுகிறது என அவர் இதன்போது தெரவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.