ஒரே ஒரு கையெழுத்தால் தெருவுக்கு வந்த கோடீஸ்வரர்!


 ​வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் அல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என நிரூபணமாகியுள்ளது பெரும் கோடீஸ்வரர் பிரமோத் மிட்டலின் வாழ்க்கை.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவருமான லட்சுமி மிட்டலின் சகோதரர் தான் பிரமோத் மிட்டல். இவர் தற்போது மிகவும் திவாலான மனிதராக லண்டன் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரமோத் தனது தந்தை, மனைவி, மகன் மற்றும் மைத்துனர்கள் எனப் பலரிடம் 25 பில்லியன் பவுண்ட்ஸ் கடன்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதையடுத்து திவாலான மனிதராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெரும் பணக்காரராக இருந்து பிரமோத் மிட்டலின் இந்த பெரும் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என பலரும் யோசிக்கலாம். அவரின் வீழ்ச்சிக்கு அடி நாதமாக அமைந்தது அவர் போட்ட ஒரே ஒரு கையெழுத்து தான். மிட்டல் சகோதரர்கள் இந்தியாவில் தங்களின் தொழிலைத் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தினார்கள். லட்சுமி மிட்டலின் ஆர்சலர் மிட்டலின் தலைமையிடமாக நெதர்லாந்து உள்ளது. பிரமோத் இஸ்பாட் நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு பிரமோத் மிட்டல் போஸ்னிய கோக் தயாரிப்பாளரான ”Global Ispat Koksna Industrija Lukavac” என்ற நிறுவனம் பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாத கையெழுத்து தான் தன்னுடைய வாழ்க்கை தலைவிதியை மாற்றப் போகிறது என்பதை பிரமோத் அன்று அறிந்திருக்க வாய்ப்பில்லை. Global Ispat நிறுவனம் தான் பெற்ற கடனான 166 மில்லியன் டாலரை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தத் தவறியது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு போஸ்னியாவில் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.

அதோடு இந்தியாவில் மாநில வர்த்தக கழகத்தில் 2200 கோடி மோசடி செய்து அதற்கான விசாரணையைச் சந்தித்து வருகிறார். இதனிடையே கடந்த 2013ம் ஆண்டு பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ரீஸ்டியின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தினார். அதற்காக டச்சு நாட்டை சேர்ந்த முதலீட்டு வாங்கியாளரான ‘Gulraj Behl’ உடன் சேர்ந்து 50 மில்லியன் பவுண்டுகளைச் செலவு செய்தார். அப்போது அது இந்திய மதிப்பில் 505 கோடி ஆகும்.

அன்று மகளின் திருமணத்திற்கு 500 கோடி செலவு செய்தவர் இன்று திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய பிரமோத், ”எனக்கு என்று தனிப்பட்ட வருமானம் இல்லை. நானும் எனது மனைவியும் தனித் தனியாக வங்கிக் கணக்குகளை வைத்துள்ளோம். எனது மனைவியின் வருமானம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது குடும்பம் மற்றும் எனது மனைவியிடம் இருந்து தான் எனது தனிப்பட்ட செலவுகளுக்காக மாதம் தோறும் பணம் பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது திவாலானவராக அறிவிக்கப்பட்டுள்ள பிரமோத் மிட்டலின் சகோதரர் லட்சுமி மிட்டல், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.